மீனம்
பூரட்டாதி.. முயற்சி வெற்றி தரும்
ஞானக்காரகனான குருவை நட்சத்திர அதிபதியாக கொண்டிருந்தாலும் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு கர்மக்காரகனான சனி ராசிநாதனாகவும், 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு குருவே ராசிநாதனாகவும் உள்ளார். 1,2,3 ம் பாதத்தினருக்கு மே 11 முதல் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரித்து, குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலையையும், சுபிட்சத்தையும் உண்டாக்குவார். தொழிலில் முன்னேற்றம், எதிர்பார்த்த வருமானம், பொன் பொருள் சேர்க்கை, பிள்ளைகளால் பெருமையை உண்டாக்குவார். குழந்தைப்பேற்றை தருவார். படிப்பில் முன்னேற்றம், பட்டம், பதவி என பெருமை சேர்ப்பார். பூர்வீகச் சொத்தில் இருந்து பிரச்னைகளைத் தீர்த்து வைப்பார். உறவினர் மத்தியில் செல்வாக்கை அதிகரிப்பார். இக்காலம் உங்களுக்கு மிகப் பெரிய யோக காலமாக அமையும். நினைப்பதெல்லாம் நடந்தேறும். கடந்த கால நெருக்கடி விலகும். 4 ம் பாதத்தினருக்கு, சுக ஸ்தானமான 4 ம் இடத்தில் சஞ்சரித்து தொழிலில் பின்னடைவை ஏற்படுத்துவார். வருமானத்தில் நெருக்கடியை உண்டாக்குவார். உழைப்பை அதிகரிப்பார். எடுக்கும் முயற்சிகளில் இழுபறியை ஏற்படுத்துவார். எந்த ஒன்றிலும் கடுமையாக முயற்சி செய்தால் மட்டுமே ஆதாயம் என்ற நிலைக்கு ஆளாக்குவார். பணியாளர்களுக்கு அலைச்சலை அதிகரிப்பார். உறங்குவதற்கு நேரமில்லை சாப்பிடுவதற்கு நேரமில்லை என்ற நிலையினை உண்டாக்குவார். உறவினருடன் இடைவெளியை ஏற்படுத்துவார். நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இக்காலத்தில் மாறும். நன்றாக பழகி வந்தவர்களும் உங்களை விட்டு விலகிச் செல்லும் நிலை உண்டாகும்.
பார்வைகளின் பலன்
குரு, தான் சஞ்சரிக்கும் இடத்தை விட, பார்க்கும் இடங்களுக்கு முன்னேற்றத்தை உண்டாக்குவார். அவருடைய பார்வைகள் எந்த இடத்திற்கு உண்டாகிறதோ அந்த பாவகம் சுபத்துவம் அடையும் என்பது பொது விதி, இக்காலத்தில், 1,2,3 ம் பாதத்தினருக்கு, தன் 5,7,9 ம் பார்வைகளை 9,11, மற்றும் ராசிக்கும் வழங்குவதால் நெருக்கடிகள் விலகும். செல்வாக்கு உயரும். புதிய இடம், வீடு, வாகனம் வாங்க மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் பெறும். வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி முடிவிற்கு வரும். நீண்ட நாள் கனவு நனவாகும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். உடல்நிலை பாதிப்பு விலகும். திருமண வயதினருக்கு வரன் வரும். பொன், பொருள் சேரும். 4 ம் பாதத்தினருக்கு, 8,10,12 ம் இடங்களுக்கு குருபார்வை உண்டாவதால், உடல் பாதிப்புகள் விலகும். உங்களுக்கு எதிராக சிலர் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடையும். மறைந்திருந்த செல்வாக்கு வெளிப்படும். துணிச்சலாக செயல்படுவீர்கள். தொழில் முன்னேற்றம் அடையும். பணியில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வேலைக்காக மேற்கொண்ட முயற்சிகள் நிறைவேறும். குடும்பத்தில் செலவு அதிகரிக்கும். வீடு, மனை, வாகனம் வாங்குவீர்கள். பிள்ளைகளால் கையிருப்பு கரையும். சிலர் செல்வாக்கை காட்ட நிறைய செலவு செய்வர்.
சனி சஞ்சாரம்
1,2,3 ம் பாதத்தினருக்கு, 2026 மார்ச் 6 வரை ஜென்ம ராசிக்குள் சஞ்சரிப்பவர். குடும்பம், தொழில், பணியில் நெருக்கடியை அதிகரிப்பார். வருமானத்தில் தடை, முயற்சியில் இடையூறை ஏற்படுத்துவார். வாழ்க்கைத் துணையுடன் இடைவெளியை உண்டாக்குவார். நட்புகளுடன் பகையை ஏற்படுத்துவார். ஆனாலும் மிதுன குருவின் பார்வை இந்நிலைகளை மாற்றும். 2026 மார்ச் 6 முதல் பாதச்சனியாக சஞ்சரிப்பவர், ஐந்து ஆண்டாக நீங்கள் அனுபவித்து வந்த போராட்ட நிலைக்கு முடிவு கட்டுவார். நெருக்கடியில் இருந்து உங்களை விடுவிப்பார். வசதி வாய்ப்பை அதிகரிப்பார். 4 ம் பாதத்தினருக்கு 2026 மார்ச் 6 வரை விரய சனியாக சஞ்சரித்து செலவுகளை அதிகரிப்பார். எதிர்பாராத செலவுகளால் திணறடிப்பார். ஆனாலும் மிதுன குருவின் பார்வையால் ஓரளவு நெருக்கடி நீங்கும். மனதில் இருந்த குழப்பம் விலகும். 2026 மார்ச் 6 முதல் ஜென்ம சனியாக சஞ்சரிப்பவர் உடல்நிலையில் சங்கடத்தை ஏற்படுத்துவார். வாழ்க்கைத் துணைக்கும் உங்களுக்கும் பிரச்னைகளை உண்டாக்குவார். புதிய நபர்களால் குடும்பத்திற்குள் குழப்பம் வரலாம். தொழில், வேலையில் அக்கறையை அதிகரிப்பார்.
ராகு, கேது சஞ்சாரம்
1,2,3 ம் பாதத்தினருக்கு ராகு ஜென்ம ராசிக்குள், கேது 7 ல் சஞ்சரிப்பதால் மனதில் ஆசை அதிகரிக்கும். வசதி வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வதற்காக சிலர் தவறான வழியில் செல்வர். தவறான நட்பிற்கு ஆளாவதுடன் அவர்களால் உங்கள் பெயரும் கெடும். சிலருக்கு சட்ட சிக்கல்கள் உண்டாகும். தகுதிக்கு கீழானவர்களின் நட்பு சிலருக்கு ஏற்படும். அதனால் வாழ்க்கைத் துணைக்கும் உங்களுக்கும் பிரச்னை உண்டாகும். 4ம் பாதத்தினருக்கு ராகு 12 ல், கேது 6 ல் சஞ்சரிப்பதால் இதுவரை இருந்த நெருக்கடி விலகும். நிம்மதியான உறக்கமும் சந்தோஷமும் ஏற்படும். நோய்கள் விலகும். எதிரி தொல்லை விலகும். செல்வாக்கு அதிகரிக்கும். வம்பு வழக்கில் சாதகம் ஏற்படும்.
சூரிய சஞ்சாரம்
1,2,3 ம் பாதத்தினருக்கு, ஜூலை 17 – ஆக. 16, நவ. 17 – 2026 ஜன 14 காலங்களிலும், 4 ம் பாதத்தினருக்கு, மே 15 – ஜூன் 14, ஆக. 17 – செப். 16, டிச. 16 – 2026 பிப். 12 காலங்களிலும் சூரியன் தன் 3,6,10,11 ம் இடங்களில் சஞ்சரிப்பதால் முயற்சி வெற்றி பெறும். உடல்நிலை சீராகும். அரசு வழியில் ஆதாயம் வரும். தொழில் தொடங்கும் முயற்சியை வெற்றி பெறும். நினைத்தது நடக்கும். வியாபாரம், தொழிலில் ஆதாயம் ஏற்படும். பணப்புழக்கம் கூடும்.
செவ்வாய் சஞ்சாரம்
1,2,3 ம் பாதத்தினருக்கு டிச. 6 – 2026 ஜன. 14 காலத்திலும், 4 ம் பாதத்தினருக்கு, ஜூன் 8 – ஜூலை 30, 2026 ஜன. 14 – பிப். 21 காலங்களிலும் செவ்வாயின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் நினைத்த வேலைகள் நடந்தேறும். வருமானம் அதிகரிக்கும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் பெறும். செல்வாக்கு உயரும்.
பொதுப்பலன்
1,2,3 ம் பாதத்தினருக்கு, 5 ம் இட குருவும், அவருடைய பார்வைகளும், 4 ம் பாதத்தினருக்கு, 6 ம் இட கேதுவும், குருவின் பார்வைகளும், 4 பாதத்தினருக்கும், சூரியன், செவ்வாய் சஞ்சார நிலைகளும் யோகப் பலனை வழங்கும். கனவு நனவாகும். விருப்பம் நிறைவேறும். குடும்பம், தொழில், வேலையில் முன்னேற்றம் உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.
தொழில்
தொழிலில் இருந்த தடைகள் விலகும். முடங்கிய தொழில்கள் வளர்ச்சி பெறும். இயந்திரத் தொழில், வாகன உற்பத்தி, ஆட்டோ மொபைல்ஸ், ஸ்பேர் பார்ட்ஸ், பேக்டரி, டிராவல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், எக்ஸ்போர்ட், பைனான்ஸ், ஆன்லைன் வர்த்தகம், ஜூவல்லரி, வேளாண் சார்ந்த பொருட்கள், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ் தொழில்கள் லாபம் அடையும்.
பணியாளர்கள்
அரசு பணியாளர்களுக்கு நெருக்கடி விலகும். மேலதிகாரியின் ஆதரவு உண்டாகும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். தனியார் நிறுவன ஊழியர்களுக்கு நெருக்கடி மறையும். நிர்வாகத்தினரிடம் மதிப்பு அதிகரிக்கும். எதிர்பார்த்த சலுகை, ஊதிய உயர்வு கிடைக்கும்.
பெண்கள்
குரு பகவானின் சஞ்சாரமும் பார்வைகளும் சாதகமாக இருப்பதால் நினைப்பது நடந்தேறும். படிப்பு, வேலை, திருமணக் கனவுகள் நனவாகும். கணவரின் அன்பு அதிகரிக்கும். கணவனை இழந்த, பிரிந்தவர்களுக்கு மறுமணம் நடக்கும். குடும்பத்தில் மரியாதை அதிகரிக்கும். வேலை பார்க்கும் இடத்தில் இருந்த நெருக்கடி மறையும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.
கல்வி
படிப்பில் இருந்த தடை விலகும். படிப்பின் மீது அக்கறை அதிகரிக்கும். ஆசியரியர்களின் ஆலோசனையை ஏற்பீர்கள். பொது, போட்டித் தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர்கல்வி கனவு நனவாகும்.
உடல்நிலை
உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடம் விலகும். தொடர்ந்து மருத்துவ சிகிச்சை எடுத்து வந்தவர்களும் இக்காலத்தில் ஆரோக்கியமாக நடைபோடுவீர்கள்.
குடும்பம்
குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை, நெருக்கடி மறையும். தம்பதி ஒற்றுமை அதிகரிக்கும் பிள்ளைகளின் நலனில் அக்கறை கூடும். வீடு, வாகனம் என கனவுகள் நனவாகும். சமூக அந்தஸ்து உயரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும்.
பரிகாரம்; ஆலங்குடி குருபகவானை அர்ச்சனை செய்ய நன்மை உண்டாகும்.
உத்திரட்டாதி.. வழக்கில் வெற்றி
கர்மக்காரகனான சனி பகவானை நட்சத்திர அதிபதியாகவும், தன, புத்திரர் காரகனான குருவை ராசிநாதனாகவும் கொண்ட நீங்கள், முன்னேற்றத்தை நோக்கி நடைபோடக் கூடியவர்கள். முடிவிற்கு நீங்கள் வந்துவிட்டால் அதை எவராலும் மாற்ற முடியாது. சாதாரண இடத்தில் பிறந்தாலும் உங்கள் வாழ்க்கை வளர்ச்சியை நோக்கியதாக இருக்கும். மற்றவர்களுக்கு வழிகாட்டக் கூடியவராக திகழ்வீர்கள். மே11ல் நடக்கும் குருப்பெயர்ச்சி எப்படி இருக்கும் என்ற கேள்வி இருக்கும். அதற்கு காரணம் 3 ம் இடத்தில் சஞ்சரித்த குரு உங்களுக்கு ஏற்படுத்திய படிப்பினை தான். 4 ம் இடத்தில் குரு சஞ்சரிக்கும் போது யாராக இருந்தாலும் அவருக்கு இடமாற்றம் ஏற்படும் என்பது விதி. தேவையற்ற ஆசை, சஞ்சலம் உண்டாகும். விருப்பப்பட்ட வாகனங்களை இக்காலத்தில் வாங்க வைப்பார். தாயாரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு வீட்டை நவீனமாக மாற்றும் வாய்ப்பு கிடைக்கும். தாய்வழியில் சொத்து கிடைக்கும். தாய் மாமனின் ஆதரவால் நன்மை அதிகரிக்கும். நோய்கள் தீரும்.
பார்வைகளின் பலன்
குரு, தான் சஞ்சரிக்கும் இடத்தை விட, பார்க்கும் இடங்களுக்கு முன்னேற்றத்தை உண்டாக்குவார். அவரது பார்வைகள் எந்த இடத்திற்கு உண்டாகிறதோ அந்த பாவகம் சுபத்துவம் அடையும் என்பது பொது விதி. 8 ம் வீடான அஷ்டம ஸ்தானத்தையும், 10 ம் வீடான தொழில் ஸ்தானத்தையும், 12 ம் வீடான விரய ஸ்தானத்தையும் பார்ப்பதால், முதலில் உங்கள் ஆயுள் பலம் பெறும். நோய்கள் மறையும். அவமானத்துடன் வாழ்ந்த நிலையில் மாற்றம் உண்டாகும். வெற்றி அடைவதற்கான வாய்ப்பு கிடைக்கும். தொழிலும் குடும்பமும் நிலை பெறும். அனைத்து பிரச்னைகளையும் சமாளிக்கும் சக்தி உண்டாகும். முடங்கிய தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். எதிராக செயல்பட்டவர்களை அடக்கி ஆளும் நிலை உண்டாகும். சிலருக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழில் வளர்ச்சி அடையும். திறமை வெளிப்படும். செயலில் வேகமும் விவேகம் நிறைந்திருக்கும். மனதில் குழப்பம் தீர்ந்து தெளிவான நிலை உண்டாகும். வருமானம் பல வழிகளிலும் வரும். பொது வாழ்வில் ஈடுபட்டு புகழ் உண்டாகும். வாழ்க்கைத் தரம் உயரும். தம்பதிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். கருத்து வேறுபாட்டால் பிரிந்தவர்கள் மீண்டும் இணைவர். சுப விரயம் ஏற்படும். சேமிப்பை வைத்து இடம், வீடு, வாகனம் வாங்குவீர்கள். சுபநிகழ்வுகள் நடக்கும். சிலர் வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொள்வர். காணாமல் போன பொருள் திரும்ப வரும். கைவிட்டுப் போன சொத்து மீண்டும் கைவசமாகும். மனைவி ஓரிடம் கணவன் ஓரிடம் என வாழ்ந்த நிலை மாறி இருவரும் ஒன்றாக, மகிழ்ச்சியாக வாழும் நிலை உண்டாகும். மனதில் குழப்பம் தீரும். நிம்மதியான உறக்கம் வரும்.
சனி சஞ்சாரம்
2026 மார்ச் 6 வரை விரய சனியாக சஞ்சரிப்பவர் செலவுகளை அதிகரிப்பார். கையில் இருக்கும் பணம் தண்ணீராக செலவாகும். வீடு, வாகனம், மருத்துவம், படிப்பு, ஆடம்பர பொருட்கள் என கையிருப்பு கரையும். மிதுன குருவின் பார்வையால் செலவுகள் கட்டுப்படும். மார்ச் 6 முதல் ஜென்ம சனியாக சஞ்சரிப்பவர் செயல்களில் தடைகளை ஏற்படுத்துவார். வாழ்க்கைத் துணைக்கும் உங்களுக்கும் இடைவெளியை உண்டாக்குவார். தொழில், வேலையில் அக்கறையை அதிகரிப்பார்.
ராகு, கேது சஞ்சாரம்
ராகு 12 ல், கேது 6 ல் சஞ்சரிப்பதால், ஒரு பக்கம் செலவு அதிகரித்தாலும் மறு பக்கம் நிம்மதி இருக்கும். கவலை இன்றி உறங்குவீர்கள். மனம் சந்தோஷமடையும். நோய்களின் தீவிரம் குறையும். ஆரோக்யமாக செயல்படுவீர்கள். எதிர்ப்பு விலகும். வழக்கில் வெற்றி உண்டாகும்.
சூரிய சஞ்சாரம்
மே 15 – ஜூன் 14, ஆக. 17 – செப். 16, டிச. 16 – 2026 பிப். 12 காலங்களில் சூரியன் தன் 3,6,10,11 ம் இட சஞ்சாரங்களால் உங்கள் நிலையை உயர்த்துவார். எடுக்கும் முயற்சிகளை லாபமாக்குவார். அரசு வழியில் ஆதாயத்தை உண்டாக்குவார். புதிய தொழில் தொடங்கும் முயற்சியை வெற்றியாக்குவார். நினைத்ததை நடத்தி வைப்பார்.
செவ்வாய் சஞ்சாரம்
ஜூன் 8 – ஜூலை 30, 2026 ஜன. 14 – பிப். 21 காலத்தில் செவ்வாயின் 6,11 ம் இட சஞ்சாரத்தால் எடுத்த வேலைகளில் வெற்றிகளை வழங்குவார். நினைத்த வேலைகளை நடத்தி வைப்பார். வருமானத்தை அதிகரிப்பார். வியாபாரம், தொழிலில் முன்னேற்றம் தருவார்.
பொதுப்பலன்
குருவின் பார்வைகளும், 6 ம் இடத்தில் சஞ்சரிக்கும் கேதுவும், சூரியன், செவ்வாய் சஞ்சார நிலைகளும் உங்கள் செல்வாக்கை உயர்த்தும். குடும்பம், தொழில், வேலையில் முன்னேற்றம் உண்டாகும். மனதில் இருந்த குழப்பம் நீங்கும்.
தொழில்
ஜீவன ஸ்தானத்திற்கு குருபார்வை உண்டாவதால் தொழில் முன்னேற்றமடையும். முயற்சிக்கேற்ற ஆதாயம் உண்டாகும். நிதி நிறுவனம், பேக்டரி, வாகன உற்பத்தி, ஆட்டோ மொபைல்ஸ், ஸ்பேர் பார்ட்ஸ், டிராவல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், எக்ஸ்போர்ட், ஹார்டுவேர், ஜீவல்லரி, ரியல் எஸ்டேட், பதிப்பகம், அச்சகம், கல்வி சார்ந்த தொழில்கள், ஆன்லைன் வர்த்தகம் முன்னேற்றம் பெறும்.
பணியாளர்கள்
அரசு பணியாளர்களின் நிலை உயரும். வேலையில் இருந்த வழக்கு, நெருக்கடி முடிவிற்கு வரும். தடைபட்டிருந்த பதவி உயர்வும், விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். தனியார் நிறுவன ஊழியர்களுக்கு புதிய நம்பிக்கை உண்டாகும். வேலை பார்க்கும் இடத்தில் மதிப்பு உயரும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். சிலர் பார்க்கும் வேலையை விட்டு விட்டு கடல் கடந்து செல்வர்.
பெண்கள்
உடலில் இருந்த குறைபாடுகள் விலகும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். படிப்பு, வேலை, திருமணக் கனவு நனவாகும். அஷ்டம ஸ்தானத்தை குரு பார்ப்பதால் மாங்கல்யம் பலம் பெறும். கருத்து வேறுபாட்டாலும், வேலையின் காரணமாகவும் பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவர். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். கணவன், மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். குழந்தைகளின் நலனில் அக்கறை கூடும். புதிய வீடு, வாகனம் வாங்குவீர்கள். பொன், பொருள் சேரும்.
கல்வி
படிப்பின் மீது ஆர்வம் அதிகரிக்கும். ஆசிரியர்களின் ஆலோசனைகளை ஏற்பீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு உங்களை உற்சாகப்படுத்தும். பொதுத் தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். மேற்கல்வி முயற்சி வெற்றி பெறும்.
உடல்நிலை
ஆறாமிடத்தில் சஞ்சரிக்கும் கேதுவும், 8 ம் இடத்தைப் பார்க்கும் குருவும் படுத்த படுக்கையாக இருப்பவரையும் எழுந்து நடமாட வைப்பர். உடல் பாதிப்புகள் விலகி ஆரோக்கியம் மேம்படும்.
குடும்பம்
குருபகவானின் பார்வைகளும், 6 ம் இடத்தில் சஞ்சரிக்கும் கேதுவும் குடும்பத்தில் நிம்மதியை உண்டாக்குவர். குரு பகவானின் பார்வை விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி, ராகுவிற்கு உண்டாவதால் செலவுகள் கட்டுப்படும். கணவன், மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். உடல்நிலை சீராகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். புதிய சொத்து சேரும். பிள்ளைகளுக்காக எடுக்கும் முயற்சி வெற்றியாகும். சிலர் புதிய வீடு கட்டி பால்காய்ச்சுவர்.
பரிகாரம்: மகாலிங்கேஸ்வரரை வழிபட வாழ்வில் வளம் கூடும். நன்மை உண்டாகும்.
ரேவதி.. பிசினசில் டாப்பர்
வித்யாகாரகனான புத பகவானை நட்சத்திர அதிபதியாகவும், ஞானக் காரகனான குருவை ராசிநாதனாகவும் கொண்ட நீங்கள், திட்டமிட்டு செயல்படக் கூடியவர்கள். செல்வாக்கு, அந்தஸ்து, முன்னேற்றம் என்பதை நோக்கியே உங்கள் பயணம் இருந்து கொண்டிருக்கும். மென்மையாகவே ஒவ்வொன்றையும் சாதிக்கும் சக்தி கொண்டவர்கள் நீங்கள். விரும்பியதை வசப்படுத்திடக் கூடிய ஆற்றல் பெற்ற உங்களுக்கு மே 11 முதல் உங்கள் ராசிநாதன் குருபகவான் உங்கள் நட்சத்திரநாதன் புதனின் ஆட்சி வீடான மிதுனத்தில் சஞ்சரிக்கப் போகிறார். உங்கள் ராசிக்குள் புதன் நீச்சம் அடைந்தாலும், குரு பகவான் எங்கு சஞ்சரிக்கிறாரோ அந்த இடத்திற்குரிய பலன்களை வழங்க வேண்டியவராகிறார். குரு பகவானின் 4ம் இட சஞ்சாரத்தால் வாழ்க்கைக்குரிய அடிப்படை வசதிகளை அடையக்கூடிய காலமாக இக்காலம் இருக்கும். நீண்ட நாளாக ஆசைப்பட்ட ஒவ்வொன்றையும் இக்காலத்தில் அடைவீர்கள். வசதி வாய்ப்பு அதிகரிக்கும். புதிய வீடு, வாகனம் சேரும். பொது வாழ்வில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு புதிய பொறுப்பு, பதவி கிடைக்கும். அரசு பணியாளர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். தாயாரின் உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடம் விலகும். ஆசைபட்ட ஒவ்வொன்றையும் அடைவதற்காக கடும் முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி அடைவீர்கள். இக்காலம் உழைப்பால் முன்னேற்றம் அடையக்கூடிய காலமாக இருக்கும். சிலருக்கு வசிக்கும் இடத்தை விட்டு வேறு இடத்திற்கு செல்லும் நிலை ஏற்படும்.
பார்வைகளின் பலன்
குரு, தான் சஞ்சரிக்கும் இடத்தை விட, பார்க்கும் இடங்களுக்கு முன்னேற்றத்தை உண்டாக்குவார். அவருடைய பார்வைகள் எந்த இடத்திற்கு உண்டாகிறதோ அந்த பாவகம் சுபத்துவம் அடையும் என்பது பொது விதி. இக்காலத்தில் 8,10,12 ம் இடங்களுக்கு குருபார்வை உண்டாவதால், தொழில் அமோகமாக வளர்ச்சி அடையும். வேலை பார்க்கும் இடத்தில் உங்களுக்கேற்பட்ட பிரச்னைகள் நீங்கி மீண்டும் செல்வாக்குடன் பணியில் அமர்த்தப்படுவீர்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும். இதுவரை பட்ட சங்கடம், அவமானம் எல்லாம் இல்லாமல் போகும். வாட்டி வதைத்த நோய்கள் குணமாகும். நீங்கள் நினைக்கும் ஒவ்வொரு வேலைகளையும் திறமையாக நடத்தி அதில் லாபம் காண்பீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். திருமண வயதினருக்கு மணமாலை ஏறும். தொழில், வியாபாரம், வேலை, வாழ்க்கை சூழலால் இருக்கும் இடத்தை விட்டு வேறு ஊரில் சிலர் குடியேறுவர். புதிய இடம், வீடு, வாகனம் என நீண்ட நாள் கனவு நனவாகும். நிம்மதியான உறக்கம் இக்காலத்தில் ஏற்படும். செலவு அதிகரித்தாலும் அதனால் உங்கள் மனதில் சந்தோஷம் இருக்கும். பூர்வீக சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னை இக்காலத்தில் முடிவிற்கு வரும். சிலர் பூர்வீக இடத்தில் வீடு கட்டி குடியேறுவர். தடைபட்ட முயற்சி வெற்றியாகும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். வருவாய் அதிகரிக்கும். இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வந்தது போல் உங்கள் நிலை மாறும்.
சனி சஞ்சாரம்
2026 மார்ச் 6 வரை 12 ம் வீட்டில் சஞ்சரிப்பவர் பல வழிகளிலும் செலவை ஏற்படுத்துவார். அவசரத் தேவைக்காக கடன் வாங்க வைப்பார் என்றாலும், மிதுன குருவின் பார்வையால் செலவுகள் யாவும் சுபச்செலவாக மாறும். 2026 மார்ச் 6 முதல் ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் சனி, உடல்நிலையில் சங்கடத்தை ஏற்படுத்துவார். எடுக்கும் முயற்சிகளில் தடைகளை ஏற்படுத்துவார். நண்பர்களுடன் கருத்து வேறுபாட்டை உண்டாக்குவார். வாழ்க்கைத் துணைக்கும் உங்களுக்கும் இடைவெளியை அதிகரிப்பார். தொழில், வேலையில் நெருக்கடியை உண்டாக்குவார்.
ராகு, கேது சஞ்சாரம்
12 ல் ராகு, 6 ல் கேது சஞ்சரிப்பதால், நீண்டநாள் பிரச்னைகள் முடிவிற்கு வரும். குடும்பத்தில் இருந்த குழப்பம் தீரும். தவறானவர்கள் உங்களை விட்டு விலகிச் செல்வர். இனி நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் வெற்றியாகும். உடல் பாதிப்பு விலக ஆரம்பிக்கும். வேலை, தொழிலில் ஏற்பட்ட இடையூறு, போட்டிகள் எல்லாம் விலகும். இழுபறியாக இருந்த வழக்குகளில் வெற்றி உண்டாகும். செல்வாக்கு உயரும்.
சூரிய சஞ்சாரம்
மே 15 – ஜூன் 14, ஆக. 17 – செப். 16, டிச. 16 – 2026 பிப். 12 காலங்களில் சூரியன் 3,6,10,11 ம் இடங்களில் சஞ்சரிப்பதால் உங்களுக்கிருந்த நெருக்கடிகள் சூரியனைக் கண்ட பனி போல் விலகும். நினைத்ததை நடத்தி முடிப்பீர்கள். உடல்நிலை சீராகும். தொழில், உத்தியோகம், குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். அரசு வழியில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.
செவ்வாய் சஞ்சாரம்
ஜூன் 8 – ஜூலை 30, 2026 ஜன. 14 – பிப். 21 காலத்தில் செவ்வாயின் 6,11 ம் இட சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் எதிர்ப்புகளை முறியடிப்பீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். நோய்களில் இருந்து குணமடைவீர்கள். விரும்பிய இடத்தை வாங்குவீர்கள். பணம், புகழ், செல்வாக்கு, அந்தஸ்து என்ற திருப்தியுடன் வாழ்வீர்கள்.
பொதுப்பலன்
குருப் பார்வைகளும், 6 ம் இட கேதுவும், சூரியன், செவ்வாய் சஞ்சார நிலைகளும் சாதகமாக இருப்பதால் இக்காலம் உங்களுக்கு யோக காலமாக இருக்கும். தடைபட்ட வேலைகளை நடத்தி முடிப்பீர்கள். பொருளாதாரம் சீராகும். பழைய கடன்களை அடைப்பீர்கள். புதிய சொத்து சேரும்.
தொழில்
எந்த ஒன்றிலும் தனித்துவத்துடன் செயல்பட்டு வரும் உங்களுக்கு, தொழிலில் அக்கறை அதிகரிக்கும். பிசினசில் டாப்பராக திகழ்வீ்ர்கள். சிலர் புதிய தொழில் தொடங்குவர். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். ஷேர் மார்க்கெட், நிதி நிறுவனம், ஜுவல்லரி, எக்ஸ்போர்ட், கல்வி ஸ்தாபனம், ஆன்மிக பொருட்கள், ஸ்டேஷனரி, ஆன்லைன் வர்த்தகம், பதிப்பகம், தொலைக்காட்சி, யூடியூப், ஸ்பேர் பார்ட்ஸ், கல்வி சார்ந்த பொருட்கள், பேக்டரி, வேளாண்மை, ஒப்பந்தத் தொழில்கள் வளர்ச்சி அடையும்.
பணியாளர்கள்
தொழில் ஸ்தானம் பலம் அடைவதால் பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நிர்வாகமும் உங்களை மதித்து சலுகை, ஊதியத்தை வழங்கும். அரசு பணியாளர்களுக்கு தடைபட்ட பதவி உயர்வு கிடைக்கும். செல்வாக்கு அதிகரிக்கும்.
பெண்கள்
போராட்டங்களையே சந்தித்து வந்த உங்களுக்கு இக்காலம் யோக காலமாகும். நினைத்தது நடந்தேறும். உடலில் பாதிப்புகள் விலகும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். தொல்லைகள் தந்த உறவினர்கள் விலகிச் செல்வர். படிப்பு, வேலை, திருமணக் கனவு நனவாகும். வாழ்க்கைத் துணையுடன் இணக்கம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். சுயதொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும்.
கல்வி
வித்யா காரகனின் ராசிக்குள் ஞானக்காரகனும் உங்கள் ராசிநாதனுமான குரு சஞ்சரிப்பதால், படிப்பில் இருந்த தடைகள் விலகும்.உங்கள் திறமை வெளிப்படும். பொதுத் தேர்விலும், போட்டித் தேர்விலும் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். கல்லுாரிக் கனவு நனவாகும்.
உடல்நிலை
கேதுவின் சஞ்சாரமும், குருப்பார்வையும் நோயால் அவதிப்பட்ட நிலையை மாற்றும். பார்க்காத டாக்டர் இல்லை, போகாத ஆஸ்பிட்டல் இல்லை என விரக்தி அடைந்தவர்களின் நிலை இப்போது மாறும். உடல்நிலை பாதிப்புகள் குணமாகும்.
குடும்பம்
நெருக்கடியான நிலையில் இருந்து விடுதலை அடைவீர்கள். இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு வந்ததுபோல் உங்கள் குடும்ப நிலை மாறும். கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். ஒற்றுமை அதிகரிக்கும். புதிய இடம், வீடு, வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். உறவினர் மத்தியில் அந்தஸ்து உயரும். பிள்ளைகளின் நலனில் அக்கறை கூடும். சுபநிகழ்ச்சிகள் நடக்கும். நீண்ட நாள் கனவு நனவாகும்.
பரிகாரம்: லட்சுமி நாராயணரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.