தமிழகத்தில் நாளை முதற்கட்டமாக 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதற்கிடையில் தற்போதைய கல்வி ஆண்டில் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை முழு அளவில் நடத்த முடியாத நிலை இருப்பதால், பாடத்திட்டங்கள் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி 40 சதவீதம் அளவிற்கு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டிருப்பதாக பள்ளி கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த கல்வி ஆண்டில் மீதம் இருக்கும் நாட்களில் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப்பகுதிகள் குறைக்கப்பட்டுள்ளது தொடர்பாக மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் கூறிய கருத்துகள் பின்வருமாறு:-
ஆனையூர் மாணவி ரேஷ்மா(10-ம் வகுப்பு): பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவித்துள்ளது சந்தோஷமாக உள்ளது. காரணம் என்னவென்றால், ஆன்லைன் வகுப்புகளில் நடந்தும் பாடங்கள் சரியாக புரியவில்லை. வகுப்பறையில் அமர்ந்து படித்தால் தான் சரியானதாக இருக்கும். மேலும், ஆசிரியர்களும், பாடத்தை சீக்கிரம் முடித்து விட வேண்டும் என்பதற்காக வேக வேகமாக ஆன்லைன் வகுப்புகளை நடத்துகின்றனர். பள்ளி திறந்த உடனேயே எந்தெந்த பாட பகுதிகள் உண்டு என்பதை உடனடியாக விளக்க வேண்டும். எவ்வளவு பாடப்பகுதியாக இருந்தாலும் பரவாயில்லை. அதனை தெரிந்து கொண்டால் நன்றாக இருக்கும்..
மாணவி தனுஷ்ஸ்ரீ:
பள்ளிகள் திறப்பது நல்லது தான். மேலும், தற்போது எவ்வளவு பாடப்பகுதிகள் குறைந்திருக்கிறார்கள் என்பது பற்றி முழுமையாக தெரியாவிட்டாலும், ஒரளவிற்கு தெரியும். அதன்படி மீதமுள்ள பாடப்பகுதியை படித்து வருகிறோம். இது சரியானது முடிவு தான். முழுவதுமாக வைத்திருந்தால் படிப்பதற்கு சிரமமாக இருந்திருக்கும்.
பழங்காநத்தம் மாணவர் சாரதி (பிளஸ்-2) :
எப்போது பள்ளிக்கு செல்லலாம் என காத்திருக்கிறோம். பாடப்பகுதி குறைத்துள்ளது வரவேற்கத்தக்கது. பாடப்பகுதியில் குறைப்பு தொடர்பாக ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தகுந்த முறையில் வழிகாட்ட வேண்டும். பொறுமையுடன் பாடம் நடத்தினால் மட்டுமே இந்த கல்வியாண்டில் எதிர்பார்த்த தேர்ச்சியை பெறமுடியும். தேர்வுக்கு குறைவான நாட்களே இருப்பதால், 60 சதவீத பாடப்பகுதியில் எது முக்கியமானதோ அதனை மட்டும் தெளிவாக ஆசிரியர்கள் விளக்க வேண்டும்.
தலைமை ஆசிரியர்கள் கழக சட்ட செயலாளர் அனந்தராமன்:
பள்ளி கல்வித்துறையின் மூலம் மாணவர்களின் நலன்கருதி 40 சதவீத பாடப்பகுதிகள் குறைக்கப்பட்டுள்ளன. பாடப்பகுதிகள் குறைத்தது, அரசின் சரியான முடிவு தான். பாடப்பகுதிகள் குறைக்கவில்லை என்றால் கிராமப்புற மாணவர்கள் சிரமப்படுவார்கள். அவர்கள் 7 மாதங்களாக எவ்வளவு பாடத்தை கற்றிருந்தாலும், பள்ளிக்கு வந்து கற்றால் தான் சரியானதாக இருக்கும். குறைக்கப்பட்ட பாடங்கள் குறித்து ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தகுந்த வழிகாட்டல் வழங்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளி தலைமை ஆசிரியர் கிறிஸ்டோபர் ஜெயசீலன்:
கல்வித்துறையில் உள்ள பல நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் பாடப்பகுதிகள் குறைக்கப்பட்டுள்ளது. இது சரியான முடிவு. இதற்கு தலைமை ஆசியர்கள் சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.
கூடுதல் பாடப்பகுதிகள் இருந்தால் படிப்பதற்கு கஷ்டமாக இருக்கும். இதற்கும் குறைவாக பாடப்பகுதியை குறைந்தால், மாணவர்கள் வருங்காலங்களில் போட்டி தேர்வில் கலந்து கொள்வதில் சிக்கல்கள் ஏற்படலாம். பள்ளிகளுக்கு வந்த பின்னர் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள குழப்பங்கள் படிப்படியாக தீரும்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.