ஆன்லைன் வகுப்புகளை ஊக்குவிக்க வேண்டும்; மாணவர்களின் வருகைப்பதிவில் கண்டிப்பு கூடாது: பள்ளிகள் திறப்புக்கு அரசு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரம் அடைந்ததால் நாடு முழுவதும் பள்ளி-கல்லூரிகளை அடைக்க கடந்த மார்ச் 16-ந்தேதி மத்திய அரசு உத்தரவிட்டது.
பின்னர் 25-ந்தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டதால், இதுவரை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை. அதேநேரம் புதிய கல்வியாண்டு தொடங்கியதை தொடர்ந்து பல பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகின்றன.
இந்தநிலையில் கடந்த ஜூன் 8-ந்தேதி முதல் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் தற்போது 5-வது கட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர்த்து பிற பகுதிகளில் வருகிற 15-ந்தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் மற்றும் இதர கல்வி நிறுவனங்களை திறக்கலாம் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
எனினும் பள்ளி, கல்லூரிகள் திறக்கும் விவகாரத்தில் அந்தந்த மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களே இறுதி முடிவு எடுக்கலாம் எனவும் மத்திய அரசு கூறியுள்ளது.
இவ்வாறு வருகிற 15-ந்தேதி முதல் படிப்படியாக பள்ளிகள் திறப்பதற்கு அனுமதி அளித்துள்ள மத்திய அரசு, பள்ளிகள் திறப்பில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
* மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் தொடர்பாக உள்ளூர் தேவைகளின்படி, தங்களுக்கென நிலையான செயல்பாட்டு நெறிமுறைகளை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் உருவாக்கிக்கொள்ளலாம்.
* மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்கள் வெளியிடும் வழிகாட்டு நெறிமுறைகளை அடிப்படையாக கொண்டு பள்ளிகள் தங்களுக்கான நிலையான செயல்பாட்டு நெறிமுறைகளை உருவாக்கிக்கொள்ள ஊக்குவிக்கப்படுகிறது.
* பள்ளிகளின் மரச்சாமான்கள், தளவாடங்கள், பொருட்கள், சேமிப்பு பகுதிகள், தண்ணீர் தொட்டிகள், சமையலறைகள், கேண்டீன்கள், கழிவறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள், பள்ளி வளாகம் என அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினி தெளித்து, முற்றிலும் சுத்தம் செய்து தயார்படுத்திக்கொள்ள வேண்டும். உள்ளரங்குகளில் சுத்தமான காற்றோட்டம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
* மாணவர்களின் பாதுகாப்பு, சமூக இடைவெளி விதிகள் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு நிலையான செயல்பாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும். அவற்றை நோட்டீஸ்கள், போஸ்டர்கள், குறுந்தகவல்கள், பெற்றோருடனான தொடர்புகள் போன்றவை மூலம் மாணவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
* பெற்றோரின் அனுமதி கடிதம் பெற்ற பின்னரே மாணவர்களை பள்ளியில் அனுமதிக்க வேண்டும். மாணவர்கள் பள்ளிக்கு நேரடியாக வருவதற்கு பதிலாக, ஆன்லைன் வகுப்புகளையும் தேர்ந்தெடுக்கலாம்.
* மாணவர்களின் வருகைப்பதிவில் கண்டிப்பு கூடாது. நெகிழ்வுத்தன்மையுடன் கூடிய வருகைப்பதிவும், நோய்க்கான விடுப்பு கொள்கைகளையும் வகுக்க வேண்டும். உடல்நலக்குறைவு ஏற்பட்டால் மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் வீட்டிலேயே இருக்க ஊக்குவிக்க வேண்டும்.
* பள்ளிகள் திறந்து 2 முதல் 3 வாரங்கள் வரை மதிப்பீட்டு நடவடிக்கைகள் கூடாது. மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகள் மூலம் கல்வி கற்பதை ஊக்குவிக்க வேண்டும்.
* ஊரடங்கு காலத்தில் வீட்டை அடிப்படையாக நடந்து வந்த கல்வியில் இருந்து, வழக்கமான பள்ளி சார்ந்த கல்விக்கு மாணவர்களை சீராக மாற்றுவதை பள்ளிகள் உறுதி செய்ய வேண்டும்.
* மாற்றியமைக்கப்பட்ட பள்ளி கால அட்டவணை, மாற்றி அமைக்கப்பட்ட ஆண்டு கல்வி திட்டம், மாற்று வகுப்புகள், பள்ளி திரும்பும் விழிப்புணர்வு பிரசாரங்கள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் பள்ளிகள் மேற்கொள்ளலாம்.
இவ்வாறு மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.