சில எளிய வழிகளை பின்பற்றி மன அழுத்தத்தில் இருந்து உடனடியாக விடுபடலாம்.
தற்போதைய பரபரப்பான சூழலில் பலரும் எதிர்கொள்ளும் மிக முக்கியமான பிரச்சனைகளில் ஒன்று மன அழுத்தம். பெரும்பாலான நேரங்களில் செல்போன், லேப்டாப் என மூழ்கிக் கிடக்கும் நாம், நமது அருகில் உள்ளவர்களிடம் கூட மனம் விட்டு பேசுவதில்லை. மன அழுத்தம் உடலுக்கு பல விதமான நோய்களையும் கொடுக்கக் கூடியது. உங்கள் அருகில் உள்ளவர்களும் இதுபோன்ற பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்களா என தெரிந்து உதவி செய்யுங்கள். மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவதற்கான 10 எளிய வழிகளை இங்கே பார்ப்போம்.
இசை:
எந்த ஒரு கடின சூழ்நிலையில் இருந்தும் மீண்டு வர இசை உதவும். மனதில் ஏற்பட்டிருக்கும் பல குழப்பங்களுக்கு மருந்தாக இசை அமையும். மன அழுத்தம் இருக்கும் போது, கண்களை மூடி மெதுவான இசை கொண்ட பாடல்களை சிறிது நேரம் கேளுங்கள். இது உங்கள் மூளை மற்றும் நரம்புகளை அமைதிப்படுத்த உதவும். மேலும் ரத்த அழுத்தம் அதிகரிக்காமல் தடுக்கவும் இசை பயன்படும். இல்லையென்றால் கடல் அலைகள் ஒலி அல்லது இயற்கையான ஒலிகளை ரசித்து கேளுங்கள். இதன் மூலம் உங்கள் மனம் அமைதியடையும்.
கலந்துரையாடல்:
மன அழுத்தத்திற்கு ஆளாகும் போது, உங்கள் நண்பர் அல்லது குடும்பத்தினரிடம் பிரச்சனைகளை பகிர்ந்து கொள்ளுங்கள். இதுபோன்ற சமயங்களில் அன்புக்குரியவர்களின் ஆறுதலான வார்த்தைகள் உங்களுக்கு பாதுகாப்பான உணர்வை கொடுக்கும்.
தனிமை:
சில சமயங்களில் உங்களுக்கு யாரிடமும் பேச பிடிக்காமல் கூட இருக்கலாம். அதுபோன்ற சூழலில் நீங்கள் தனிமையை தேர்ந்தெடுங்கள். ஆனால் அந்த நேரத்தை மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவதற்காக மட்டும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்கு நீங்களே அமைதியாக பேசிக் கொள்ளுங்கள். அனைத்து பிரச்சனைகளுக்குமான தீர்வு உங்களிடம்தான் இருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள்.
உணவு:
மன அழுத்தமும், உணவும் நெருங்கிய தொடர்புடையவை. நீங்கள் கவலையாக இருக்கும் போது சரியாக சாப்பிடாமல் விட்டால் பல நோய்கள் ஏற்படும். ஆனால் அதுபோன்ற தவறு செய்ய வேண்டாம். எந்த பிரச்சனையையும் எதிர்கொள்ள நீங்கள் உறுதியுடன் இருக்க வேண்டும். மன ஆரோக்கியத்திற்கும் உணவு அவசியம். பழங்கள், காய்கறிகள், கீரைகள் என சத்தான உணவை எடுத்துக் கொள்ளுங்கள். சர்க்கரை அதிகம் உள்ள உணவுகள், கொழுப்பு மற்றும் துரித உணவுகளை தவிர்க்கவும்.
தூக்கம்:
தினமும் 7 முதல் 8 மணி நேர தூக்கம் அவசியம். உறங்கச் செல்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்பே செல்போன், தொலைக்காட்சி பயன்படுத்துவதை நிறுத்தி விடுங்கள். நீங்கள் நிம்மதியாக தூங்கும் போது மன அழுத்தம் படிப்படியாக குறைந்து விடும். அதிக மன அழுத்ததை எதிர்கொள்ளும் தருணத்தில், நன்றாக சாப்பிட்டு விட்டு ஓய்வு எடுக்கவும். இது உங்களுக்கு உடனடி தீர்வை கொடுக்கும்.
சிரிப்பு:
”வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும்’ என முன்னோர்கள் சொல்லியிருப்பது அனைவருக்கும் பொருந்தும். சிரிப்பு உங்கள் மனநிலையை மேம்படுத்துவதற்கு உதவும். இது நரம்பு மண்டலம் சுறுசுறுப்பாக இருப்பதற்கும் அவசியம். கிடைக்கும் நேரத்தை பயன்படுத்தி மகிழ்ச்சியாக இருந்து மனம் விட்டு சிரியுங்கள். உங்கள் மன அழுத்தம் விரைவில் பறந்தோடிவிடும்.
தேநீர்:
மன அழுத்தத்தில் இருக்கும் போது ஒரு கப் டீ குடியுங்கள். உங்கள் தொண்டைக்கு மட்டுமல்லாமல் மனதுக்கும் இதமான ஒரு உணர்வு கிடைக்கும். அனைத்து துன்பங்களும் படிப்படியாக குறைவதை போன்று தோன்றும். காஃபி அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டாம். இதனால் ரத்த அழுத்தம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. கிரீன் டீ உள்ளிட்டவைகளை தேர்வு செய்வது நல்லது.
உடற்பயிற்சி:
தினமும் உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள். இல்லையென்றால் நீங்கள் மன அழுத்தமாக இருப்பதை உணர்ந்தால் உடனடியாக நீங்கள் இருக்கும் இடத்தை விட்டு சென்றுவிடுங்கள். சில நிமிடங்கள் திறந்தவெளியில் மெதுவாக நடந்து கொள்ளுங்கள். ஒரே இடத்தில் அமர்ந்திருக்க வேண்டாம். உங்கள் உடலுக்கு இயக்கம் கொடுக்கும் போது ரத்த சுழற்சி சீரடைந்து மனநிலை மேம்படும்.
சுவாசம்:
ஆழ்ந்த மூச்சு விடுவது, மன அழுத்ததை எதிர்கொள்வதற்கான வழி. கண்களை மூடி மெதுவாகவும், ஆழமாகவும் மூச்சுவிடவும். உங்கள் மார்பகம் விரிவடையும் போது சுவாசத்தில் கவனம் செலுத்தி மூச்சுவிடவும். ஆழமற்ற சுவாசம் மன அழுத்தத்தை மேலும் அதிகரிக்க செய்யும். இது உங்கள் உடல்நலத்திற்கும் நல்லது.
மருத்துவர் பரிந்துரை:
நீங்கள் கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு, அதில் இருந்து மீண்டு வர முடியாமல் தவித்தால், அதற்கான மருத்துவரை அணுகுவது நல்லது. அவர் கூறும் அறிவுரைகளை கடைபிடித்து அதில் இருந்து மீண்டு வாருங்கள்.
மன அழுத்தம் நமது வாழ்க்கையின் ஒரு அங்கம். அனைவரும் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சனைகளில் இதுவும் ஒன்று. சிகிச்சை அளிக்கப்படாத மன அழுத்தம் கடுமையான மனநல மற்றும் உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும். அதனால் அதில் இருந்து மீண்டு வர இதுபோன்ற வழிகளை முயற்சித்து பாருங்கள்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.