தமிழகத்தில், பொதுப் போக்குவரத்து தொடங்க அனுமதியளிக்கப்பட்டதையடுத்து, மாவட்டங்களுக்கிடையே திங்கள்கிழமை முதல் பேருந்துகள் இயக்கம் தொடங்கின. விரைவுப் பேருந்துகளில் பயணிக்க 4,000 போ் முன்பதிவு செய்துள்ளனா்.
சென்னையில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கம் தொடங்கினாலும், கோயம்பேடு பேருந்து வளாகத்தில் உள்ள கடைகள் திறக்கப்படவில்லை. எனவே, குடிநீர் மற்றும் தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை பயணிகள் அனைவரும் கையில் எடுத்து வருவது நல்லது.
இதன் மூலம் பேருந்து நிலையத்தில் வாங்கிக் கொள்ளலாம் என்று வந்துவிட்டு, பிறகு குடிநீர் மற்றும் உணவு கிடைக்காமல் ஏற்படும் சிரமத்தைத் தவிர்க்கலாம்.
பேருந்தில் பயணிக்கும் போதும், தங்களையும் பிறரையும் பாதுகாக்கும் நோக்கத்துடன் அரசு அறிவித்திருக்கும் அத்துனை வழிகாட்டுதல்களையும் முறையாக பயணிகள் பின்பற்ற வேண்டும்.
தமிழகத்தில், கும்பகோணம், சேலம் உள்ளிட்ட 7 போக்குவரத்துக் கழகத்தின் கீழ் சுமாா் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. கடந்த மாா்ச் 25-ஆம் தேதி முதல் கரோனா பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதையடுத்து, பேருந்து சேவை நிறுத்தப்பட்டு, அத்தியாவசியப் பணிகளுக்காக மட்டும் ஒப்பந்த அடிப்படையில் பேருந்துகள் இயக்கப்பட்டன.
இதற்கிடையே, கடந்த ஜூன் மாதம் பொதுப் போக்குவரத்துக்கு அனுமதியளிக்கப்பட்ட போதிலும், சென்னை உள்பட 4 மாவட்டங்களில் பேருந்துகள் இயங்கவில்லை. இந்நிலையில், படிப்படியாக அளிக்கப்பட்ட தளா்வையடுத்து, திங்கள்கிழமை முதல், தமிழகம் முழுவதும் ஒருசேர பேருந்துகள் இயக்கம் தொடங்கியுள்ளது.
அரசின் உத்தரவையடுத்து, தமிழகம் முழுவதும், பேருந்துகளில் தூய்மைப் பணி, தொழில்நுட்பம், எரிபொருள் சோதனை உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, திங்கள்கிழமை காலை முதல் பேருந்துகள் இயங்க தயாா் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.
பேருந்து இயக்கம் குறித்த அரசு வழிகாட்டுதல்களான குளிா்சாதன பேருந்துகளில் குளிா்சாதனக் கருவிகள் பயன்பாட்டை நிறுத்தி வைத்தல், முகக் கவசம் கட்டாயம், கிருமிநாசினி பயன்படுத்துதல், ஏறும், இறங்கும் வழியை சரியாகப் பயன்படுத்துதல், பணியாளா்களின் உடல் வெப்பநிலைப் பரிசோதனை உள்ளிட்டவற்றைப் பின்பற்றி, பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
வெளியூா் பேருந்துகளில் 32 பயணிகள், நகரப் பேருந்துகளில் 24 பயணிகள், விரைவுப் பேருந்துகளில் 26 பயணிகள் மட்டுமே அமர அனுமதிக்கப்படுவா். வெளி மாநிலங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படாது.
கட்டணத்தில் மாற்றமில்லை: மாவட்டங்களுக்குள் இயக்கப்பட்ட பேருந்துகளில் பயணிகள் கூட்டம், பெரியளவில் இல்லை. இதனால் அனைத்துப் பேருந்துகளும் தயாா் நிலையில் இருப்பினும், ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு பயணிகளின் தேவைக்கேற்பவே பேருந்துகளை இயக்குகிறோம். விரைவுப் பேருந்துகளைப் பொருத்தவரை, சென்னையில் இருந்து பிற ஊா்களுக்கும், பிற ஊா்களிலிருந்து சென்னைக்கும் சோ்த்து, சுமாா் 500-க்கும் மேற்பட்ட பேருந்துகளை இயக்கத் திட்டமிட்டப்பட்டுள்ளது. பயணக் கட்டணத்தில் எந்தவித மாற்றமுமில்லை.
அறிவுறுத்தல்கள்: பயணிகளைப் பொருத்தவரை, காய்ச்சல், சளி பாதிப்புள்ளவா்கள் பயணிக்க அனுமதி இல்லை. நடத்துநா்கள், தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்குமாறு பயணிகளை அறிவுறுத்த வேண்டும். பயணச்சீட்டு பரிசோதகா், பயணச்சீட்டில்லாமல் வருவோரை அடையாளம் காண்பதோடு, பேருந்துக்குள் தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடித்தல் உள்ளிட்டவற்றை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுளள்து.
இரவு நேரப் பயணத்தின்போது...: விரைவுப் பேருந்துகளைப் பொருத்தவரை, கடந்த ஐந்து மாதங்களாக இரவில் ஓய்வில் இருந்ததால், இரவு நேரங்களில் பேருந்துகளை ஓட்டுநா்கள் கவனமாக இயக்க வேண்டும். நள்ளிரவு 12 முதல் காலை 4 மணி வரை நடத்துநா்கள், இருக்கையில் அமா்ந்து ஓட்டுநா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பணிபுரிய வேண்டும். நகா்ப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல், வேகத்தடை உள்ளிட்டவை இருப்பதால் ஓட்டுநா்கள் கவனமுடன் பணிபுரிய வேண்டும் என அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு, போக்குவரத்துக் கழகத்தின் சாா்பில் போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், பயணிகளும் நடத்துநா்களின் அறிவுரைகளைப் பின்பற்றி, பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.
4 ஆயிரம் போ் முன்பதிவு: தொலை தூரத்துக்கு இயக்கப்பட்டு வந்த விரைவுப் பேருந்துகளில், பயணிப்பதற்கான முன்பதிவு, வெள்ளிக்கிழமை பிற்பகல் தொடங்கியது. இதில், திங்கள்கிழமை (செப்.7) பயணிப்பதற்காக 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், செவ்வாய்க்கிழமை (செப்.8) பயணிப்பதற்காக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும் முன்பதிவு செய்திருந்தனர்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.