வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்... என்ற கண்ணதாசனின் பாடல் வரிகளை இக்கால இளைஞர்களுக்கு நினைவூட்ட வேண்டும். குறிப்பாக தேர்வுக்கு தயாராகிவரும் மாணவர்களுக்கு.
10, 12- வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் மதிப்பெண் அடிப்படையில் ரேங்க் வெளியிடும் முறைகளால் தற்கொலைகள் அதிகரிக்கின்றன என்பதால், ரேங்க் முறை ஒழிக்கப்பட்டு தற்கொலைகள் தடுக்கப்பட்டன. ஆனால் மாணவர்களின் தற்கொலைகள் நீட் தேர்வினால் தற்போது அதிகரித்து வருவது வேதனைக்குரியதாகவே உள்ளது.
தேர்வுகளும், மதிப்பெண்களும் மட்டுமே வாழ்க்கையின் பரிபூரணம் அல்ல. கல்வி என்பது சமூகத்துடன் மேன்மையான முறையில் வாழ பழகிக்கொள்ள உதவும் கருவிதானே தவிர அதுவே வெற்றி அல்ல.
மதிப்பெண்கள் மூலம் அடையும் வெற்றியை மட்டுமே சமூகம் ஏற்றுக்கொள்ளும் என்ற மனநிலையில் இருந்து மாணவர்கள் வெளிவரவேண்டும். இதற்கு மாணவர்களின் பெற்றோர்களும் போதிய அளவு உதவ வேண்டும்.
குறைந்த மதிப்பெண்களால் மாணவர்கள் மன சோர்வினையோ, மன அழுத்தத்தையோ அடையாமல் இருப்பதற்கு பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் பங்கு மிகப்பெரியது. அத்தகையை சூழலை மாணவர்களுக்கு ஏற்படுத்தித்தர வேண்டும். குறிப்பாக போட்டித்தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு இத்தகைய சூழலை ஏற்படுத்தித்தர வேண்டியது அவசியம்.
தகுதித்தேர்வு, ஆன்லைன் கல்வி போன்றவற்றால் மாணவர்கள் இன்னல்களுக்கு ஆளாகிவரும் நிலையில், பெற்றோர்களும், ஆசிரியர்களும் இதனை உணரவேண்டியது மிகமுக்கியமாக உள்ளது.
அதேவேளையில் தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெறும் மாணவர்கள் மட்டுமே சிறந்த மாணவர்கள், அவர்களே பெற்றோர்களுக்கு சிறந்த பிள்ளைகள் என்ற பிம்பத்திலிருந்து மாணவர்களும் வெளியே வரவேண்டும்.
தகுதித்தேர்வுகள் என்பது நாம் தீர்மானித்து வைத்த இலக்கை அடைய பயன்படும் ஒரு வழி மட்டுமே. அந்த வழி கடினமாக உள்ளது என்பதற்காக பயணத்தை முடித்துக்கொள்வது பெரும் முட்டாள்தனம்.
இலக்கை அடையவில்லை என்பதற்காக வாழ்க்கை சூனியமாகிவிடாது. உண்மையில் வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான் நாம் இலக்கையே நிர்ணயிக்கிறோம். இதில் வாழ்க்கை மட்டுமே முதன்மையானது. அதற்கான நிர்ணயிக்கப்படும் இலக்கு என்றுமே இரண்டாம்பட்சம் தான்.
வாழ்க்கை தேர்வுகளுக்கு மட்டுமல்ல இலக்குகளுக்கும் அப்பாற்பட்டது என்பதை உணர வேண்டும். எத்தனையோ இன்னல்களில் கரைந்துபோனாலும், இயல்பான மரணத்தை எதிர்கொள்ளத் தயாராவதுதான் மனித இயல்பு.
தேர்வு முறைகளுக்கு அஞ்சி மாணவர்கள் தற்கொலைக்கு முயல்வது கவலைகளுக்கு முடிவல்ல, அது குடும்பத்தின் கவலைகளுக்கு துவக்கம் என்பதை மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
வீடு, கல்வி நிலையம், தேர்வு, மதிப்பெண், அதனால் பெறும் பணி இவற்றை எல்லாம் சேர்த்து வைத்து பார்த்தால், கல்வி என்பது சமுதாயத்துடன் ஒன்றி மகிழ்ச்சியுடன் வாழவும், வாழ்க்கையில் உள்ள மகிழ்ச்சியை கண்டுகொள்ளவும் மட்டும் தான் என்பது புரியும். இதனை மாணவர்கள் உணர்ந்தால் தற்கொலை என்ற எண்ணம் தோன்றாது.
தேர்வுகளைத் தாண்டி வாழ்ந்து பார்ப்பதற்கு நிறைய நெறிமுறைகள் உள்ளன என்பதை மாணவர்கள் உணர வேண்டும். அத்தகைய மாணவர்களை பெற்றோர்கள் புரிந்துகொள்ள வேண்டும். வாழ்க்கை ஒருமுறைதான்...
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.