தமிழகத்தில் முழு ஊரடங்கு இன்னும் ஒரு மாதம் தேவை
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மே 24 ம் தேதி முடிவடைகிறது. தினமும் ஆயிரக்கணக்கானோரை உயிர்ப்பலி வாங்கி கோர தாண்டவமாடும் கொரோனா தொற்றைகட்டுக்குள் கொண்டு வர வேண்டுமானால், இன்னும் ஒரு மாதத்திற்கு முழு ஊரடங்கை அரசு அமல்படுத்தியே ஆகவேண்டும்.
![latest tamil news](https://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_2770744.jpg)
இரண்டாவது அலையில் டில்லியில் கொரோனா வேகமாக பரவிய போது, சற்றும் யோசிக்காமல் அம்மாநில அரசு முன்னதாகவே ஒரு மாதத்திற்கு முழு ஊரடங்கை அமல்படுத்தியது. அப் போது ஒருநாள் பாதிப்பு 26,000 ஆக இருந்தது. பாதிப்பு விகிதம் (டெஸ்ட் பாசிட்டிவிட்டி ரேட்) 36 சதவீதம் வரை போனது. ஒருமாத தளர்வுகளற்ற ஊரடங்கின் விளைவு, டில்லியில் இப்போது ஒரு நாள் பாதிப்பு 5 ஆயிரத்திற்கு கீழ் வந்து விட்டது. பாதிப்பு விகிதம் 6 சதவிகிதம் ஆகிவிட்டது.
இந்தியாவில் முதலிடம் தமிழகத்திற்கு
டில்லி, மகாராஷ்டிரா, ஆந்திரா, கேரளா, கர்நாடகாவில் தினசரி பாதிப்பு குறைந்து வருவதால், இந்திய அளவில் 26 நாட்களுக்கு பிறகு முதன் முதலாக மே 17 ல் மொத்த பாதிப்பு 3 லட்சத்திற்கு கீழே வந்து விட்டது. சராசரி பாதிப்பு விகிதமும் 18 சதவீதம் ஆகி விட்டது. ஆனால் மே 17 ல் தமிழகத்தின் ஒருநாள் பாதிப்பு 33,072. அதாவது தேசிய பாதிப்பில் 10 சதவீதத்திற்கும் மேல் தமிழகத்தில் பாதிப்பு உள்ளது.
![latest tamil news](https://img.dinamalar.com/data/gallery/gallerye_060723601_2770744.jpg)
மே 18 ல் தமிழகத்தின் ஒருநாள் பாதிப்பு 33,047. கேரளாவில் ஒரு வார ஊரடங்கில் தினசரி பாதிப்பு குறைந்தபட்சம் 5 ஆயிரம் அளவிலாவது குறைந்தது. ஆனால் தமிழகத்தில் 15 நாள் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் தினசரி பாதிப்பு குறையவில்லை; மாறாக இப்போது இந்தியாவில் பாதிப்பில் முதல் மாநிலம் ஆகிவிட்டது தமிழகம்.
எதற்கு ஊரடங்கு
தொடர் முழு ஊரடங்கு அமலில் இருந்த முதல் அலையில், தமிழகத்தில் ஒரு நாள் பாதிப்பு அதிக பட்சம் 6993 (ஜூலை 2020). இரண்டாவது அலையில் இதுவரை ஒருநாள் அதிகபட்ச பாதிப்பு 33,658 (மே 15, 2021). இறப்பு விகிதமும் இந்த முறை அதிகம். இதில் இருந்தே ஊரடங்கின்அவசியத்தை புரிந்து கொள்ளலாம். எனவே முழு ஊர டங்கை இன்னும் ஒரு மாதத்திற்கு அமல்படுத்துவதே கொரோனா தொற்றின் வேகத்தை குறைக்க ஒரே வழி. இது 'கசப்பு மருந்து' தான். என்றாலும் பரவும் அசுர வேகத்தை கட்டுப்படுத்த இந்த 'மருந்து' தேவைப்படுகிறது.
ஊரடங்கால் தொழில்கள் நலியும், மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பது போன்று நுாறு காரணங்கள் இருக்கலாம்; ஆனால் மனிதனின் உயிர் முக்கியம் என்ற ஒற்றை காரணமே இப்போது நம் முன்னால் தெரிகிறது. உயிர் வாழ்ந்தால் தானே பிறகு எல்லாம்!
![latest tamil news](https://img.dinamalar.com/data/gallery/gallerye_061100608_2770744.jpg)
அதிர்ஷ்டம் இருந்தால் ஆக்சிஜன் படுக்கை
எந்த மருத்துவமனைகளிலும் படுக்கைகள் இல்லை; அதிர்ஷ்டம் இருந்தால் தான் ஆக்சிஜன் படுக்கை கிடைக்கும் என்ற நிலை. மரணித்தால் எரிக்க மயானங்களில் இடமும் இல்லை. உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. ஒரே நாளில் கொரோனா அறிகுறிகளுடன், பிற நோய்களுடன் பல நுாறு பேர் இறப்பதால், அதன் எண்ணிக்கையை வெளிப்படையாக சொல்வதற்கும் தயக்கம் காட்டி மூடி மறைக்கின்றனர் அதிகாரிகள்.
![latest tamil news](https://img.dinamalar.com/data/gallery/gallerye_062901717_2770744.jpg)
பல அரசு மருத்துவமனைகளில் கொரோனா தொற்று என்று காண்பிக்காமல், நுரையீரல் தொற்றால் இறந்தனர் என்றும் பதிவு செய்கின்றனர். ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா நோயாளிகளுடன் போராடி, டாக்டர்களும், நர்ஸ்களும் சோர்ந்து போய் உள்ளனர். பலர் பாதிக்கப்பட்டு பணிக்கு வரவே அஞ்சுகின்றனர். அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது என்பதை நாம் நினைவுகொள்ள வேண்டும். அரசு எத்தனை நிபந்தனைகள், கட்டுப்பாடுகள் விதித்தாலும், அவசியத்திற்கும், அவசியமற்றும் பொறுப்பற்று மக்கள் வெளியே வருகிறார்கள்.
அவர்களும் கொரோனாவை வாங்கி பிறருக்கும் பரப்புகின்றனர். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் ஏற்கனவே நாடு தழுவிய ஊரடங்கிற்கு பரிந்துரைத்து விட்டது. எனவே தமிழக அரசும் மே 24 முதல் மீண்டும் ஒரு மாதத்திற்கு தளர்வு களற்ற ஊரடங்கை அமல்படுத்த வேண்டும். பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.