பிரதமருடனான சந்திப்பின் போது தமிழக அரசின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் முன்வைத்துள்ளார்.
புது தில்லியில் பிரதமர் நேரேந்திர மோடியை சந்தித்தப் பின் தமிழ்நாடு இல்லத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், தில்லியல் உள்ள அனைத்து ஊடக நண்பர்களுக்கும் வணக்கம். தமிழக முதல்வராக பதவியேற்றதும் பிரதமரை மரியாதை நிமித்தமாக தில்லி வந்து சந்தித்திருக்க வேண்டும். ஆனால், பிரதமரை சந்திக்க முடியவில்லை. தற்போது கரோனா பெருந்தொற்றிலிருந்து மீண்டு வந்துகொண்டிருப்பதால் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டிருந்தேன். பிரதமரும் நேரம் ஒதுக்கிக் கொடுத்தார்.
அதன்படி, இன்று புது தில்லி வந்து பிரதமரைச் சந்தித்து பேசினேன். பிரதமருடனான சந்திப்பு மன நிறைவைத் தரும் சந்திப்பாக இருந்ததைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் மோடியும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். அதற்கு நான் நன்றியை தெரிவித்துக் கொண்டேன்.
தமிழக மேம்பாட்டுப் பணிகளுக்கு முழு ஒத்துழைப்பை அளிப்பேன் என்று உறுதியளித்தார். எந்த நேரத்திலும் எந்த தேவையையும் கேட்கலாம் என்றும், தமிழகத்தின் கோரிக்கைகளையும் முழுமையாக கேட்டறிந்தார்.
அவரிடம் தமிழக அரசு சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகளை தலைப்புச் செய்தியாக சொல்லிவிடுகிறேன்.
கூடுதல் தடுப்பூசிகளை தமிழகத்துக்கு வழங்கக் கோரிக்கை வைக்கப்பட்டது.
செங்கல்பட்டில் தடுப்பூசி உற்பத்தி நிறுவனத்தை உடனடியாகச் செயல்பட வைக்க வேண்டும்.
தமிழகத்துக்கு வர வேண்டிய பல்வேறு நிதி ஆதாரங்களை மத்திய அரசு முழுவதுமாக ஒதுக்க வேண்டும்.
ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை முழுமையாக ஒதுக்க வேண்டும்.
நீட் உள்ளிட்ட அனைத்து நுழைவுத்தேர்வுகளும் ரத்து செய்யப்பட வேண்டும்.
திருக்குறளை தேசிய பொது நூலாக அறிவிக்க வேண்டும்.
காவிரியின் குறுக்கே கட்ட திட்டமிடப்பட்டிருக்கும் மேகதாது அணைக்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த அனுமதிக்க வேண்டும்.
கோதாவரி - காவிரி, காவிரி - குண்டாறு நதிநீர் இணைப்பு திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும்.
கட்சத் தீவு மீட்கப்பட வேண்டும்.
புதிய மின்சாரச் சட்டம் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை விரைவில் அமைக்க வேண்டும்.
கோவையிலும் புதிதாக எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மருத்துவக் கல்வியில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
புதிய தேசியக் கல்விக் கொள்கையை திரும்பப் பெற வேண்டும்.
நாடு முழுவதும் இலவச மற்றும் கட்டாயக் கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்.
கரோனா பரவலைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் வாழ்வாதாரங்களை இழந்த மக்களுக்கு பல்வேறு சலுகைகளை மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில், இரண்டாம் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் அகதிகளாக வாழும் மக்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதிய மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழ் மொழியை அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கோரிக்கைகள் பிரதமர் மோடியிடம் வைக்கப்பட்டதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.