1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

சிம்மம் ஆங்கில புத்தாண்டு 2021 பலன்!

சிம்மம்  ஆங்கில புத்தாண்டு 2021 பலன்! 



1.1.2021 முதல் 31.12.2021 வரை

பொது வாழ்வில் புகழ் கூடும்

(மகம், பூரம், உத்ரம் 1-ம் பாதம் வரை)

(பெயரின் முதல் எழுத்துக்கள்: ம, மி, மு, மெ, மோ, ட, டி, டு, டே உள்ளவர்களுக்கும்)

சிம்ம ராசி நேயர்களே! பிறக்கும் புத்தாண்டின் தொடக்கம் உங்களுக்கு சாதகமாகவே இருக்கின்றது. குருவின் பார்வை தன ஸ்தானத்தில் பதியும் விதத்தில் அமைவதால், செல்வாக்கு மிக்க உங்களுக்கு செல்வ வளம் சிறப்பாக அமையப்போகின்றது. இன்பங்களை எளிதில் வரவழைத்துக்கொள்ளும் விதத்தில் இந்த ஆண்டின் கிரக மாற்றம் அமைகின்றது. வாழ்வில் உயர்நிலையை அடைய சந்தர்ப்பங்கள் கைகூடிவரும். அவற்றை உபயோகப்படுத்திக்கொள்வது உங்கள் புத்திசாலித்தனமாகும்.

6-ல் சஞ்சரிக்கும் குரு பகவான். 12-ம் இடத்தில் சஞ்சரிக்கும் சந்திரனைப் பார்த்து ‘குருச்சந்திர யோக’த்தை உருவாக்குகின்றார். அதுமட்டும் அல்லாமல் நீச்சம் பெற்ற குருவோடு சனி பகவான் ஆட்சி பெற்று இணைந்திருப்பதால் ‘நீச்சபங்க ராஜயோகமும்’ ஏற்படுகின்றது. இந்த இரண்டுவிதமான யோகங்களோடு பிறக்கும் புத்தாண்டில், உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். உயர்மட்டத்தில் உள்ளவர்களின் பழக்கத்தால் தலைப்புச் செய்திகளில் வரும் அளவிற்குக் கூட புகழ் பெறுவீர்கள்.

புத்தாண்டின் தொடக்க நிலை

இந்த ஆண்டின் தொடக்கத்தில், தொழில் ஸ்தானத்தில் ராகு பகவான் வீற்றிருக்கின்றார். ‘பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை’ என்பது வள்ளுவர் வாக்கு. அப்படி பொருள் வளம் நமக்கு சிறப்பாக அமைய வேண்டுமானால், நமது ஜாதகத்தில் தொழில் ஸ்தானம் நன்றாக இருக்க வேண்டும். புத்தாண்டு பிறக்கும் பொழுதே உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் ராகு பலம் பெற்றிருக்கின்றார். எனவே நடக்கும் தொழில் சிறப்பாக நடைபெறும். மூடிக்கிடந்த தொழில் முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும். வாடிக்கையாளர்கள் வந்த வண்ணமாக இருப்பர்.

சுக ஸ்தானத்தில் இருக்கும் கேது, சுக்ரனோடு கூடியிருப்பதால் பெண் வழிப்பிரச்சினை அகலும். இல்லத்தில் சுபச்செலவுகள்அதிகரிக்கும். மனையில் மங்கல ஓசை கேட்பதற்கான அறிகுறி தென்படும். ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் அக்கறை செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். பஞ்சம ஸ்தானத்தில் சூரியன் இருப்பதால் பிள்ளைகளின் கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். அரசுவழி ஆதரவுகள் உண்டு. 6-ல் சனி சஞ்சரிப்பதால் ‘விபரீத ராஜயோக’ அடிப்படையில் சில நல்ல வாய்ப்புகள் வரலாம். திட்டமிட்ட காரியங்கள் திடீரென நடைபெறும். எதிர்பாராத தனவரவு உண்டு. அதுமட்டுமல்லாமல் குரு, புதன் இரண்டும், 6-ம் இடத்தில் சஞ்சரிப்பது யோகம்தான். ‘யோககாரகன்’ செவ்வாய், பாக்ய ஸ்்தானத்தில் இருக்கின்றார். ‘விரயாதிபதி’ சந்திரன், விரய ஸ்தானத்தில் இருப்பதால் விரயங்கள் ஏற்பட்டாலும் முன்னதாகவே வரவு உங்கள் கைகளில் வந்து சேரும்.

மகர குருவின் சஞ்சாரம்

ஆண்டின் தொடக்கத்தில் மகர ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவான், உங்கள் ராசிக்கு 5, 8 ஆகிய இடங் களுக்கு அதிபதியானவர். அவர் இப்பொழுது நீச்சம் பெற்றுச் சஞ்சரிக்கின்றார். ‘6-ல் குரு வந்தால் ஊரில் பகை’ என்பார்கள். ஆனால் இப்பொழுது அவரோடு சனி சேர்ந்திருப்பதால் எதிரிகள் பலம் குறையும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உதிரி வருமானங்கள் வந்து சேரும். ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். புதிய தொழில் தொடங்கி பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்வீர்கள். பிள்ளைகளுக்கு உரிய கடமைகளைச் செய்ய முன்வருவீர்கள். பிரச் சினைகளில் இருந்து விடுபட சந்தர்ப்பங்கள் கைகூடிவரும்.

பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு அதிபதியாக குரு பகவான் விளங்குவதால், முன்னோர் சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் அகலும். முக்கியப் புள்ளிகள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். சகோதர வழியில் திருப்திகரமான தகவல் வரலாம். அசையாச் சொத்துக்கள் வாங்கும் ஆர்வம் அதிகரிக்கும். ஆன்மிகப் பயணங்களும் அனுகூலம் தரும். ஒருசில சமயங்களில் தடுமாற்றங்கள் ஏற்படலாம். அனுபவஸ்தர்கள், அருளாளர்கள் சொல்லும் ஆலோசனைகள் அவ்வப்போது உங்களுக்கு கைகொடுக்கும். ஆலயத் திருப்பணிகளையும் முன்னின்று நடத்தும் யோகம் உண்டு. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு குறைபாடுகள் ஏற்பட்டாலும், ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவதன் மூலம் அதை சீராக்கிக் கொள்ளலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர்மட்ட அதிகாரிகளின் நெருக்கத்தால் கேட்ட சலுகைகள் கிடைக்கும். முக்கியப் பொறுப்புகளை உங்களிடம் ஒப்படைக்கலாம்.

குருவின் பார்வை பலன்

புத்தாண்டில் மகரத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான், உங்கள் ராசிக்கு 2, 10, 12 ஆகிய இடங்களைப் பார்க்கின்றார். குருவின் பார்வை 2-ம் இடத்தில் பதிவதால் குடும்ப முன்னேற்றம் திருப்திகராக இருக்கும். உதாசீனப்படுத்திய உறவினர்கள் ஓடிவந்திணைவர். ‘வாசல் தேடி வந்த வரன்கள் திரும்பிச் சென்றுவிட்டதே’ என்று கவலைப்பட்டவர்களுக்கு, இப்பொழுது நல்ல தகவல் வரலாம். கல்யாண காரியங்கள் மட்டுமல்லாமல், பெற்றோர்களின் மணி விழாக்கள், முத்து விழாக்கள் போன்றவை கூட நடைபெறலாம். தொழில் முன்னேற்றம் உண்டு. தொல்லை தந்த பங்குதாரர்கள் இனி உங்களுக்கு ஒத்துழைப்புச் செய்வர். நழுவிச் சென்ற வாய்ப்புகள் நாடிவரும். பயணங்கள் பலன் தருவதாக அமையும். தொழில் ரீதியாக செல்கின்ற வெளிநாட்டுத் தொடர்பு வெற்றி தரும். பற்றாக்குறை அகன்று பணவரவு திருப்தி தரும் விதத்தில், குருவின் பார்வை பலம் கொடுக்கப்போகின்றது. உத்தியோகத்தில் பணிவாய்ப்பிற்காகக் காத்திருப்பவர்களுக்கு, அது கைகூடும். உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைத்து அது தேடிவரும்.

கும்ப குருவின் சஞ்சார காலத்தில் உங்கள் ராசியை குரு பார்ப்பதால், உடல் ஆரோக்கியம் சீராகும். தெளிந்த சிந்தனையோடு செயல்படுவீர்கள். திட்டமிட்ட காரியங்களை திட்டமிட்டபடியே செய்து முடிக்க இயலும். தள்ளிப்போன காரியங் கள் தடையின்றி நடைபெற வழிபிறக்கும். அமைதியையும், நிதானத்தையும் கடைப்பிடித்து அடுக்கடுக்காக வெற்றிகளை காணப்போகிறீர்கள். நல்ல மனிதர்களின் சகவாகம் உங்களுக்கு கிடைக்கும். உடன்பிறப்புகள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பர். ‘கடன் சுமை கூடிக்கொண்டே போகின்றதே’ என்று கவலைப்பட்டவர்களுக்கு, இப்பொழுது எதிர்பாராத தனவரவு வந்து இதயத்தை மகிழ்விக்கும்.

குருவின் வக்ர காலம்

16.6.2021 முதல் 13.9.2021 வரை, கும்ப ராசியில் குரு வக்ரம் பெறுகின்றார். உங்கள் ராசிக்கு பஞ்சம அஷ்டமாதிபதியாக விளங்கும் குரு பகவான் இப்பொழுது 7-ம் இடத்தில் வக்ரம் பெறுகின்றார். எனவே வாழ்க்கைத் துணையோடும் மற்ற குடும்ப உறுப்பினர்களோடும் அனுசரித்துச் செல்வதன் மூலமே அமைதி காண இயலும். குறிப்பாக குடும்ப உறுப்பினர்களுக்கும், உறவினர்களுக்கும் நீங்கள் எவ்வளவு நல்லது செய்தாலும் அவர்கள் நன்றி காட்ட மாட்டார்கள். உத்தியோகத்தில் மேலிடத்தின் வெறுப்பிற்கு ஆளாக நேரிடலாம்.

14.9.2021 முதல் 13.10.2021 வரை, மகர ராசியில் குரு வக்ரம் பெறுகின்றார். குரு ஆறில் வக்ரம் பெறும் பொழுது அது நன்மையை வழங்கும். 8-க்கு அதிபதியாகவும், குரு விளங்குவதால் ‘கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்’ என்பதற்கு ஏற்ப உத்தியோகத்தில் நல்ல திருப்பங்கள் ஏற்படலாம். எதிரிகளின் பலம் கொஞ்சம் குறையும். உதிரி வருமானம் வந்து சேரும். ‘படித்த படிப்புக்கேற்ற வேலை கிடைக்கவில்லையே’ என்று கவலைப்பட்டவர்களுக்கு, இப்பொழுது நல்ல வேலை கிடைக்கும். பிள்ளைகளால் சில பிரச்சினைகள் தலைதூக்கும். அவர்களை உங்கள் பராமரிப்பில் அல்லது மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. வெளிநாட்டில் இருக்கும் உறவினர்கள் வழியில் மனக்குழப்பம் தரும் தகவல் வரலாம். சொத்துக்களை விற்கும் பொழுதும், வாங்கும் பொழு தும் பத்திரங்களைச் சரிபார்த்துக் கையெழுத்திடுவது நல்லது.

சனியின் வக்ர காலம்

12.5.2021 முதல் 26.9.2021 வரை, மகரத்தில் சனி வக்ரம் பெறுகின்றார். உங்கள் ராசிக்கு 6, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி பகவான். அவரது வக்ர காலத்தில் நன்மை, தீமை கலந்தே நடைபெறும். முடியாது என்று நினைத்த காரியம் திடீரென முடிவடையும். நிறைவேறும் என்று நினைத்த காரியம் முடிவடையாமல் போகலாம். பொதுநலத்தில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணையோடும் மற்ற குடும்ப உறுப்பினர்களோடும் பிணக்குகள் ஏற்படாமல் இணக்கம் ஏற்பட வேண்டுமானால் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.

கவனமுடன் செயல்பட வேண்டிய காலம்

14.4.2021 முதல் 3.6.2021 வரை, மற்றும் 4.6.2021 முதல் 21.7.2021 வரையான காலகட்டம் செவ்வாய் - சனி பார்வை காலமாகும். இக்காலத்தில் கொஞ்சம் விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டும். உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். சுக ஸ்தானம் மற்றும் பாக்கிய ஸ்தானத்திற்கு அதிபதியான செவ்வாயின் பார்வை சனியின் மீது பதிவதால் பல நல்ல வாய்ப்புகள் கை நழுவிச் செல்லலாம். மனக்கலக்கம் அதிகரிக்கும். மகிழ்ச்சி குறைவு ஏற்படாமல் இருக்க ஆன்மிகத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. நட்பு பகையாகாமல் பார்த்துக்கொள்வது உங்கள் புத்திசாலித்தனமாகும். பணியாளர்கள் தொல்லை அதிகரிக்கும். பணி, நோயின் தாக்கம் என்று குடும்பத்தில் ஒருவர் மாற்றி ஒருவருக்குத் தொல்லை கொடுத்து மருத்துவச் செலவுகளை அதிகரிக்கச் செய்யும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் மாற்றப்படலாம். மனம் அலைபாயும். மற்றவர்களின் ஆசை வார்த்தைகளைக் கேட்டு ‘அதைச் செய்யலாமா, இதைச் செய்யலாமா?’ என்று சிந்தித்து விரயங்கள் வந்து சேரும்.

வளர்ச்சி தரும் வழிபாடு

உங்கள் ராசிநாதன் சூரியன் என்பதால் சிவன் வழிபாட்டை முறையாக மேற்கொள்வதோடு, பிரதோஷ நாளில் நந்தியம்பெருமானையும் வழிபடுங்கள்.

பெண்களுக்கான பலன்கள்

இப்புத்தாண்டு நினைத்தது நிறைவேறும் ஆண்டாக அமையப்போகின்றது. வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். உடல்நலம் சீராகி உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். புதிய இடம் வாங்கும் முயற்சி கைகூடும். தாய் மற்றும் உடன்பிறப்புகள் உங்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பர். பிள்ளைகளின் கல்யாண முயற்சிகள் கைகூடும். அதுமட்டுமல்லால் அவர்களின் எதிர்கால நலன் கருதி நீங்கள் தீட்டிய திட்டங்களும் வெற்றி பெறும். பணிபுரியும் பெண்களுக்கு திடீர் மாற்றங்கள் ஏற்பட்டு முன்னேற்றத்தை வரவழைத்துக்கொடுக்கும். சகப்பணியாளர்களிடம் பக்குவமாக நடந்துகொள்வது நல்லது. செவ்வாய் - சனி பார்வை காலத்தில் மிகுந்த விழிப்புணர்ச்சியோடு செயல்பட வேண்டும்

Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags