1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

சனிப்பெயர்ச்சி பலன்! கன்னி

சனிப்பெயர்ச்சி பலன்!  கன்னி



 உத்திரம் 2, 3 4ம் பாதங்கள் : பொது : அர்த்தாஷ்டம சனியின் தாக்கத்தினால் அவதிப்பட்டு வந்த உங்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி சற்று ஆனந்தத்தினைத் தரும் வகையில் அமையும். பொதுவாக ஐந்தாம் இடத்து சனியினால் அதிக லாபத்தினையோ, செய்யும் தொழிலில் முன்னேற்றத்தினையோ காண இயலாது என்ற கருத்து நிலவுகிறது. ஆயினும் எதிர்கால சிந்தனையை மனதினில் வலுவாகக் கொண்டுள்ள உங்களைப் பொறுத்த வரை சனி பகவான் சரியான திட்டமிடுதலுக்கு வழிகாட்டுவார். சரியாகத் திட்டமிட்டு செயல்படும் பட்சத்தில் சிறப்பான வெற்றியைக் கண்டு வருவீர்கள். கன்னி ராசியைப் பொறுத்த வரை 5ம் இடத்திற்கு அதிபதி சனி பகவான் ஆட்சி பலம் பெற்று அமர்வதால் உங்கள் விருப்பங்கள் நிறைவேறக் காண்பீர்கள். நெடுநாட்களாக மனதினில் இருந்து வரும் ஆசைகள் ஒன்றன்பின் ஒன்றாக நடந்தேறும் காலமாக அமையும்.

நிதி : பொருளாதார நிலை நல்ல வளர்ச்சியைக் காணும். அதே நேரத்தில் குதிரைப் பந்தயம், லாட்டரி, சூதாட்டங்கள் போன்ற விஷயங்களில் மனம் லயிக்கும். அவற்றால் வீண் விரயத்தினை சந்திக்க வேண்டிய வாய்ப்பு உள்ளதால் மனதினைக் கட்டுப்படுத்துவது நல்லது. கையிருப்பில் பணம் இல்லாது சிரமப்பட நேரிடும். உறவினர்கள் மத்தியில் கருமி, கஞ்சன் என்ற பெயர் எடுக்க நேரிடலாம்.

குடும்பம் : ஐந்தாம் இடத்தில் சனி பகவான் அமர உள்ளதால் பிள்ளைகளின் உடல்நிலையிலும், மன நிலையிலும் கவனம் செலுத்து வேண்டியது முக்கியம். அடிக்கடி அவர்களது செயல்களை கண்காணித்து அவ்வப்போது தகுந்த புத்திமதிகளைத் தன்மையாகச் சொல்லி அவர்களை நல்வழிப்படுத்த வேண்டியிருக்கும். ஒரு சில நேரத்தில் அவர்களது செயல்கள் உங்களுக்கு தர்மசங்கடமான நிலையை உருவாக்கக் கூடும். தாயார் வழி உறவினர்களால் பொருளாதார ரீதியான பிரச்னையை சந்திக்கக் கூடும்.
கன்னி
கல்வி : மாணவர்கள் தங்கள் கல்விநிலையில் இதுநாள் வரை இருந்து வந்த தடைகள் விலகக் காண்பார்கள். அக்கவுண்டன்சி, எகனாமிக்ஸ், காமர்ஸ் துறையைச் சார்ந்த மாணவர்களும், ரசாயனம், இயற்பியல், புவியியல் துறையைச் சார்ந்தவர்களும் சிறப்பான முன்னேற்றத்தினைக் காண்பார்கள். உயர்கல்வி மாணவர்கள் தங்கள் ஆராய்ச்சியில் வெற்றி காணும் நேரம் இது. தேர்வு நேரத்தில் சிறு அலட்சியம் கூட பெரிய பிரச்னையைத் தோற்றுவித்துவிடும் என்பதால் மிகுந்த கவனத்துடன் இருந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.
பெண்கள் : நினைக்கின்ற காரியத்தை உடனுக்குடன் முடிக்க இயலாமல் தவிக்க நேரிடும். முக்கியமான நேரத்தில் அவ்வப்போது தைரியத்தினை இழந்து காணப்படுவீர்கள். மனக்குழப்பத்தின் காரணமாக இரவினில் நிம்மதியான உறக்கம் கெடலாம். எதைப்பற்றியும் கவலைப்படாது கடமையைச் சரிவர செய்து வாருங்கள். ஆடம்பர செலவுகளால் உண்டாகும் வீணான பொருள் விரயம் என்பது தடுக்கப்படும். சனிபகவானின் திருவருளால் நன்மை உண்டாகும்.

உடல்நிலை : ஆறாம் பாவக அதிபதி சனி ஐந்தில் குருவுடன் இணைவதால் உடல்நிலையில் சிறுசிறு உபாதைகளைக் கண்டு வருவீர்கள். குறிப்பாக பெண்கள் கர்ப்பப்பை சார்ந்த பிரச்னைகள், நீர்கட்டி போன்றவற்றால் சற்று சிரமம் காண்பர். சிறுநீரகத்தில் கல் உருவாகுதல் போன்ற பிரச்னையைத் தவிர்க்க எப்போதும் வெந்நீர் பருகி வருவது நல்லது. வாழைத்தண்டு, சிறுகீரை போன்றவற்றை உட்கொண்டு வருவதும் ஆரோக்யத்திற்கு நல்லது.

தொழில் : தொழில் ரீதியான முன்னேற்றம் தடைபடும் காலம் என்பதால் புதிய முயற்சிகளில் ஈடுபடுவது நல்லதல்ல. ஏற்கெனவே செய்து கொண்டிருக்கும் தொழில் சிறப்பான லாபத்தினைத் தந்து கொண்டிருக்கும். ஆயினும் அடையும் லாபத்தினை மீண்டும் தொழிலிலேயே முதலீடு செய்ய வேண்டியிருக்கும். உத்யோகஸ்தர்களும் அதிகளவிலான சம்பாத்யத்திற்கு ஆசைப்பட்டு பார்ட் டைம் ஜாப் ஏற்றுக்கொண்டு சற்று சிரமப்படுவார்கள். ஆடிட்டிங், ஸ்டேஷனரி, பத்திரிகை, இன்ஷ்யூரன்ஸ், தகவல்தொடர்பு, ஏஜென்சி, மற்றும் ஜோதிடத் துறையைச் சேர்ந்தவர்கள் தங்கள் தொழிலில் சிறப்பான முன்னேற்றத்தைக் காண்பார்கள்.

பரிகாரம் : சுவாமி ஐயப்பனை வழிபட்டு வரவும்.

ஹஸ்தம் : பொது : உங்களுக்கு நெருக்கமான நபர் ஒருவரை தவறாகப் புரிந்துகொள்ளும் வாய்ப்பு உருவாகலாம். காதால் கேட்கும் வீண் வதந்திகளை நம்பி நிச்சயமாக செயலில் இறங்கக் கூடாது. எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு என்ற கருத்தினை மனதில் நிலை நிறுத்துவது அவசியமாகிறது. உங்களது மனதில் தத்துவ ஞானம், இரக்கம், பணிவு, தியாகம் பற்றிய சிந்தனைகள் பிரதானமாக இடம்பிடிக்கும். தோற்றத்தில் பொலிவு கூடும். நல்லோர்தம் சபைதனில் தெளிவான கருத்துக்களை உடைய அற்புதமான வார்த்தைகளைப் பயன்படுத்தி சிறப்பான நற்பெயர் காண்பீர்கள். பொழுதுபோக்கு விஷயங்களில் மனம் அதிக ஈடுபாட்டுடன் செயல்படும்.

நிதி : களத்ர ஸ்தானம் ஆகிய ஏழாம் இடத்திற்கு லாபத்தில் அதாவது 11ம் இடத்திலும், லாப ஸ்தானம் ஆகிய 11ம் இடத்திற்கு ஏழிலும் சனி பகவான் உச்ச வலிமையுடன் சஞ்சரிக்க உள்ளது மிகுந்த தனலாபத்தினைப் பெற்றுத் தரும். வாழ்க்கைத்துணையின் பெயரில் புதிய முதலீடுகளில் ஈடுபடுவது நல்லது. அவரது பெயரில் அசையாச் சொத்துக்கள் வாங்கும் வாய்ப்புகள் உருவாகும். நண்பர்களுக்காக கடன் பெற்றுத் தருவதைத் தவிர்க்க வேண்டியது அவசியமாகிறது.

குடும்பம் : தெளிவாக முடிவெடுக்க இயலாத சூழலில் வாழ்க்கைத்துணையின் ஆலோசனைகள் குறிப்பிடத்தகுந்த வெற்றியைப் பெற்றுத் தரும். அதே நேரத்தில் வாழ்க்கைத்துணையின் உறவினர்களோடு கருத்து வேறுபாடு தோன்றும் வாய்ப்பு உள்ளது. உடன்பிறந்தோரோடு இணைந்து செயல்படும் பணிகளில் வெற்றி காண்பீர்கள். பிள்ளைகளின் உடல்நிலையிலும், மன நிலையிலும் கவனம் செலுத்த வேண்டிய சூழல் உருவாகும். ஒரு சில நேரத்தில் அவர்களது பிடிவாதமான செயல்கள் உங்களுக்கு தர்மசங்கடதை உருவாக்கக் கூடும். அவ்வப்போது தகுந்த புத்திமதிகளைத் தன்மையாகச் சொல்லி அவர்களை நல்வழிப்படுத்த வேண்டியிருக்கும்.

கல்வி : மாணவர்கள் பாடங்களைப் புரிந்து படிக்கும் திறனில் முன்னேற்றம் காண்பர். அக்கவுண்டன்சி, எகனாமிக்ஸ், காமர்ஸ், ஜோதிடவியல் துறையைச் சார்ந்த மாணவர்களும், விலங்கியல், வேதியியல், மருந்தியல் துறையைச் சார்ந்தவர்களும் சாதனைகள் புரிவார்கள். உங்கள் எழுத்தின் வலிமை உயர்வதால் சிறப்பான மதிப்பெண்களைப் பெற்று விரும்பிய உயர்கல்விப் பாடப்பிரிவில் இடம் பெறுவீர்கள் என்பதில் ஐயமில்லை.
கன்னி
பெண்கள் : சனி பகவானின் பார்வை குடும்ப ஸ்தானத்தின் மீது விழுவதால் அவ்வப்போது குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகளை சந்திக்க நேரலாம். ஆயினும் உங்களின் விவேகமான அணுகுமுறையினால் பிரச்னைகளை எளிதில் சமாளித்து குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழலை உண்டாக்குவீர்கள். கணவர் உங்கள் முயற்சிகளுக்குத் துணை நிற்பார். தெளிவான முடிவெடுக்க இயலாத சூழலில் அவரது ஆலோசனைகள் குறிப்பிடத்தகுந்த வெற்றியைப் பெற்றுத் தரும்.

உடல்நிலை : சனியுடன் குரு இணைந்திருக்கும் வரை பெரிய பிரச்னை ஏதுமில்லை. நவம்பர் 2021ற்குப் பிறகு உடல்நிலையில் ஒரு சில பிரச்னைகளை சந்திக்க நேரலாம். வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள், தைராய்டு, கொழுப்பு சார்ந்த பிரச்னைகள் தோன்றக்கூடும். ஒரு சிலர் அறுவை சிகிச்சைக்கு ஆளாகும் வாய்ப்பும் உண்டு. எச்சரிக்கை தேவை.
தொழில் : கொஞ்சம் கொஞ்சமாக தொழில் ரீதியான முன்னேற்றத்தினைக் கண்டு வரும் உங்களுக்கு 2021ன் பிற்பாதியில் சற்று சோதனைக் காலம் உருவாகலாம். செய்து கொண்டிருக்கும் தொழில் சிறப்பான லாபத்தினைத் தந்து கொண்டிருக்கும் வேளையில் வேறு புதிய முயற்சிகளில் ஈடுபடுவது நல்லதல்ல. உத்யோகஸ்தர்கள் அவ்வப்போது தற்காலிக இடமாற்றத்தினையும், கேம்ப், இன்ஸ்பெக்ஷன் போன்ற பணிகளுக்காக அதிக அளவிலான அலைச்சலையும் சந்திக்க நேரிடும். ஆடிட்டிங், ஸ்டேஷனரி, பத்திரிகை, இன்ஷ்யூரன்ஸ், தகவல்தொடர்பு, ஏஜென்சிஸ், விவசாயம் மற்றும் ஜோதிடத் துறையைச் சேர்ந்தவர்கள் தங்கள் தொழிலில் சிறப்பான முன்னேற்றத்தைக் காண்பார்கள்.

பரிகாரம் : ஏழுமலையானை வணங்கி வரவும். புதன்கிழமை தோறும் விஷ்ணு சஹஸ்ரநாமம் படித்து வருவது நன்மை தரும்.

சித்திரை 1, 2ம் பாதம் : பொது : அனுபவ பாடத்தினைக் கற்றுத் தரும் சனி ஐந்தில் அமர்வதால் உங்களது மனதில் தத்துவ சிந்தனைகள், இரக்க குணம், விநயம், தியாகம் பற்றிய சிந்தனைகள் பிரதானமாக இடம்பிடிக்கும். நல்லோர்தம் சபைதனில் தெளிவான கருத்துக்களை உடைய அற்புதமான வார்த்தைகளைப் பயன்படுத்தி சிறப்பான நற்பெயர் காண்பீர்கள். உங்களது ஆலோசனையின்படி செயல்படுபவர்கள் சிறப்பான வெற்றியைக் காண்பார்கள். பிரச்னைக்குரிய விஷயங்களை விவேகத்துடன் கையாண்டு நற்பெயர் காண்பீர்கள். ஒரு வேலையை நாளை என்று தள்ளிப்போடக்கூடாது என்ற எண்ணத்துடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். நினைத்தவுடன் முடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தினால் சற்று படபடப்பு அதிகம் இருந்தாலும் காரியங்கள் வெற்றிகரமாக முடியும். பொதுக்காரியங்களில் மட்டுமே மேற்சொன்ன வகையில் வெற்றி காணமுடியும். சொந்தநலனுக்காக செய்யும் காரியங்களில் அவசரப்படாது நிதானத்துடன் செயல்படவேண்டும். இணையதளம் போன்ற தகவல் தொடர்புகளின் மூலம் நிறைய நண்பர்களை உருவாக்கிக் கொள்வீர்கள்.

நிதி : எதிர்பார்த்த அளவிற்கு தனலாபம் இல்லையென்றாலும் பொருளாதார ரீதியாக அதிக சிரமம் ஏதும் இராது. அர்த்தாஷ்டம சனி விலகி இருப்பதால் சனி பகவான் வீடு, மனை போன்ற  அசையாச்சொத்துக்களை லாபம் தரும் வகையில் அமைத்துத் தருவார். .குரு மற்றும் சனியின் அருளால் பூமி லாபம் என்பது உண்டு. பிள்ளைகளின் பெயரில் சொத்துக்களை வாங்கலாம்.
குடும்பம் : குடும்பப் பொறுப்புகளில் வாழ்க்கைத்துணைவர் உதவியாய் செயல்படுவார். உடன்பிறந்தோர் உங்கள் உதவியை நாடி வரக்கூடும். பணி நிமித்தம் அந்நிய தேசத்தில் வசிக்கும் பிள்ளைகளைப் பார்க்கும் பாக்கியம் கிட்டும். வீட்டில் பட்டாடைகள், வெள்ளி பாத்திரங்கள் சேரும். உறவினர்களிடம் இருந்து விலகியே நிற்பீர்கள். பிள்ளைகளுக்காக அதிகம் செலவழிப்பீர்கள். உங்களின் தேவையற்ற கற்பனையாலும் வீணான பயத்தினாலும் சதா அவர்களைக் குறைகூறிக்கொண்டே இருப்பீர்கள். ஆயினும் 2021ம் வருடத்தின் பின்பாதியில் அவர்கள் உங்களது விருப்பத்தினை நிறைவேற்றுவார்கள். பிள்ளைகளின் வாழ்க்கையில் சுபநிகழ்ச்சிகளுக்கான வாய்ப்பு உண்டு. சனியின் அருளால் நிச்சயமாக உங்கள் குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும்.

கல்வி : மாணவர்கள் கல்வி நிலையில் ஏற்றம் பெறும் நேரம் இது. ஏழரை சனியின் காலத்தில் உண்டான ஞாபக மறதி மறைந்து நினைவாற்றல் கூடும். அவசரப்படாமல் படிக்கும் பாடத்தினை நிதானமாக உள்வாங்கி படித்தீர்களேயானால் வெற்றி நிச்சயம். அதுவும் தேர்வுகள் நடைபெற உள்ள மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் கிரஹ நிலை சாதகமாக உள்ளதால் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவீர்கள் என்பதில் ஐயமில்லை. மருத்தவத்துறையில் உயர்கல்வி மற்றும் அயல்நாடு சென்று உயர்கல்வி பயில விரும்புவோர்க்கு சாதகமான வாய்ப்புகள் உருவாகும்.

பெண்கள் : குடும்பத்தில் நிலவி வரும் பிரச்னைகளை சமாளிப்பதில் கணவர் மிகுந்த உதவியாய் இருப்பார். ஆயினும் அவ்வப்போது அவருடன் கருத்து வேறுபாடு கொள்வீர்கள். பிள்ளைகளின் நலனுக்காக சேமிப்பில் ஈடுபட வாய்ப்புகள் உருவாகும். உங்களின் பொறுப்பான செயல்களினால் குடும்பப் பெரியவர்களிடம் நற்பெயரினை அடைவீர்கள். அக்கம்பக்கத்து வீட்டு பிரச்னைகளை அலசும் நீங்கள் உங்கள் வீட்டு பிரச்னைகள் வெளியில் தெரியாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
கன்னி
உடல்நிலை : உடல்நிலை கோடைகாலத்தில் உஷ்ண உபாதையால் பாதிக்கப்படக்கூடும். முகத்தினில் கட்டிகள், கொப்புளங்கள் போன்றவை உண்டாகும் வாய்ப்பு உண்டு. தோல்வியாதிக்கு ஆளாக நேரிடும் என்பதால் எச்சரிக்கையாக இருக்கவும். அதிப்படியான அவரசம், டென்ஷன், படபடப்பு காரணமாக ரத்த அழுத்தம் சார்ந்த பிரச்னைகள் தோன்றும். அவ்வப்போது பரிசோதனை செய்து கொள்வதோடு உணவுக் கட்டுப்பாட்டிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

தொழில் : கலைத்துறையில் இருப்பவர்கள் சிறப்பான நிலையை அடைவார்கள். அலுவலகத்தில் உங்களது நிர்வாகத்திறமை வெளிப்படும் அதே நேரத்தில் மேலதிகாரிகளிடமும் ஒத்துப்போவது நல்லது. எதிர்பார்த்துக் காத்திருந்த பதவி உயர்வு கிட்டும். பொன், வெள்ளி போன்ற ஆபரணத்தொழில் செய்பவர்கள், சிற்பக்கலை சார்ந்தவர்கள் நல்ல தன லாபத்தினை அடைவார்கள். வங்கி, இன்ஷ்யூரன்ஸ் துறையினருக்கு நல்ல முன்னேற்றம் உண்டு. தொழிலதிபர்கள் நிலுவையில் உள்ள கடன்பாக்கிகளை விரைந்து செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவார்கள். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்வோர் அரசு விதிமுறைகளை கடுமையாக பின்பற்ற வேண்டிய கட்டாயத்தினை சந்திப்பார்கள். தொழில்முறையில் உங்களது தனித்துவம் வெளிப்படும். உத்யோகஸ்தர்கள் நல்ல பெயரையும், புகழையும் சம்பாதிப்பீர்கள். கண்ணுக்குத் தெரிந்த மற்றும் தெரியாத எதிரிகள் யாரைப் பற்றியும் அதிகம் கவலைப்படமாட்டீர்கள்.

பரிகாரம் : பழனி முருகனை வணங்கி வாருங்கள். அமாவாசை நாளில் அன்னதானம் செய்வது நல்லது.
Share:
  • Related Posts:

    No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags