1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

சனிப்பெயர்ச்சி பலன்! தனுசு

சனிப்பெயர்ச்சி பலன்!   தனுசு 

ஏழரை சனியின் பிடியில் கடந்த ஆறு ஆண்டுகளாக பட்ட சிரமங்களைக் கணக்கிடும்போது வரவுள்ள சனிப்பெயர்ச்சி தங்களுக்கு முன்னேற்றத்தினைத் தரும் வகையில் அமையும். இதுவரை ஜென்ம இராசியில் அமர்ந்து கோலோச்சிய சனி பகவான் இனி இரண்டாம் இடமாகிய தன ஸ்தானத்தில் அமர உள்ளார். சனியின் சோதனை என்பது நமது நன்மைக்குத்தான் என்பதனை உணர்ந்துகொள்ள வேண்டும். நீங்கள் சிரமப்பட்டு சம்பாதிக்கும் பணத்தினை வீண் விரயமாகாமல் தடுத்தி நிறுத்தி உங்களைக் காப்பதாக பொருள் கொள்ளவேண்டும். உங்களுடைய சம்பாத்யம் ஏதோ ஒரு வகையில் சேமிப்பில் சென்றுவிடுவதால் அன்றாட செலவுகளுக்கு சற்று சிரமப்படுவீர்கள். வரும் மூன்று ஆண்டுகளில் உடல்நிலையில் சிறப்பு கவனம் தேவை. உடல்நிலை நன்றாக இருந்தால் மற்ற சோதனைகளை எளிதில் கடந்துவிட முடியும் என்பதை நினைவில் கொள்ளவும்.
நிதி : இவ்வளவு நாட்களாக உங்கள் மன நிலையையும், உடல்நிலையையும் பாதித்து வந்த சனி பகவான் இனி உங்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவார். ஐந்தாம் இடத்திற்கு அதிபதி சனி என்பதால் சிறப்பான பொருள் வரவு நிலை கண்ணுக்குத் தெரிந்தாலும், அவரே நான்காம் வீட்டிற்கும் அதிபதி ஆவதால் பணமாகச் சேராமல் சொத்துக்களுக்காக சேர்க்க வைப்பார்.கடன் வாங்கியாவது புதிய வீடு கட்டு முயற்சிப்பீர்கள்.


குடும்பம் : உடன்பிறந்தோருடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகும். அவர்களோடு இணைந்து செயல்பட்டால் குடும்பத்தில் இருந்து வரும் சலசலப்புகளை அடியோடு களைய முடியும். சொத்து விவகாரங்களில் இருந்து வரும் பிரச்னைகள் விலகும். தாயார் வழி உறவினர்களால் அனுகூலமான நிலை தோன்றும். அவர்களால் சற்று கூடுதல் செலவுகளுக்கு ஆளானாலும் கூட மன நிம்மதி காண்பீர்கள். பிள்ளைகளின் வாழ்வியல் நிலை உயரக் காண்பீர்கள். குடும்பத்தில் சுபநிழ்வுகளை எதிர்பார்க்கலாம்.

கல்வி : மாணவர்கள் கல்வி நிலையில் சிறப்பான முன்னேற்றம் கண்டு வருவார்கள். கூட்டுப்பயிற்சி சிறப்பான வெற்றியைப் பெற்றுத்தரும். பொது அறிவு வளரும். போட்டித்தேர்வுகளில் சிறப்பான வெற்றி கிட்டும். விரும்பிய கல்லூரியில் இடம் கிடைக்காவிட்டாலும் விரும்பிய படிப்பில் மற்றொரு கல்லூரியில் இடம் கிடைக்கக் காண்பீர்கள். வேதியியல், மருத்துவம், கேட்டரிங் டெக்னாலஜி, விவசாயம் படிக்கும் மாணவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர்.


பெண்கள் : பேசும் வார்த்தைகளில் அதிக கவனம் கொள்ள வேண்டும்.உங்கள் வார்த்தைகளைக் கொண்டே உங்களுக்கு சிரமத்தினைத் தரக்கூடிய செயலில் சிலர் ஈடுபடுவார்கள். வாழ்க்கைத்துணை உங்கள் செயல்வெற்றிக்கு மிகுந்த பக்கபலமாக இருந்து செயல்படுவார். அவருடைய உடல்நிலையில் அக்கறை கொள்வது அவசியமாகிறது. பிள்ளைகளின் செயல்கள் எதிர்பார்ப்பிற்கு மாறாக அமைந்தாலும் அவர்களது பெருமை பேசுவதில் ஆனந்தம் கொள்வீர்கள்.


உடல்நிலை: உடல் அசதி, பல்வலி, கைகால் குடைச்சல் போன்ற பிரச்னைகளால் உடல்நிலையில் சிரமம் காண நேரிடலாம். சனி பகவானோடு சூரியனும், சுக்ரனும் இணையும் காலத்தில் கண்பார்வையில் சிரமம் தோன்றக்கூடும். ஆரோக்கியத்தினை பேணிக் காக்க உடற்பயிற்சி அவசியம். மனநிலை நன்றாக இருந்தாலே உடல்நிலையும் நன்றாக இருக்கும் என்பதை உணர்ந்துகொண்டு செயல்படுவது நல்லது.


தொழில் : உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வின் பேரில் இடம் மாறக்கூடிய சூழல் உருவாகலாம். தானாக வருகின்ற இடமாற்றத்தினை ஏற்றுக்கொள்ள மறுக்காதீர்கள். எப்படி இருந்தாலும் சிறிது காலம் குடும்பத்தினரை விட்டு பிரிந்திருக்க வேண்டிய சூழல் உருவாகலாம் என்பதால் பதவி உயர்விற்கான வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்வது நல்லது. ஏற்றுமதி, இறக்குமதி தொழில்கள், தோல், சிமெண்ட், இரும்பு, கம்பி, பழைய சாமான்கள் வியாபாரம் போன்றவை சிறப்பான முன்னேற்றம் காணும். சமையல் கலைஞர்கள், மருத்துவத்துறை சார்ந்தவர்கள், கட்டிடக் கலைஞர்கள் ஆகியோர் தங்கள் தனித்துவத்தை நிரூபிப்பார்கள். பொதுவாக பண விவகாரங்களில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டிய நேரமே தவிர மற்றபடி ஏழரை சனியின் காலத்தில் உண்டாகும் இதர நன்மைகளை அனுபவிக்க உள்ளீர்கள் என்பதில் ஐயம் இல்லை.


பரிகாரம் : மஹிஷாசுரமர்த்தினியை வணங்கி வாருங்கள். வளர்பிறை அஷ்டமி நாட்களில் ஏதேனும் ஒரு பிச்சைக்காரருக்கு உணவளிக்கவும்.

பூராடம் :  பொதுவாக சனிபகவான் இரண்டாம் இடத்திற்கு வரும்போது குடும்பத்தைவிட்டு பிரிந்திருக்க வேண்டிய சூழலும், தூரதேச சஞ்சாரமும், பொருளாதார ரீதியாக சிரமப்பட வேண்டிய நிலையும், திருட்டு பயமும் உண்டாகும் என்று சொல்வார்கள். இருந்தாலும் ஆதியில் ஜனன ஜாதகத்தில் சனியின் பலம் பெற்றவர்களுக்கும், தற்காலத்தில் வலுவான தசாபுக்தி நடைபெறுபவர்களுக்கும் மேற்சொன்ன பலன்களின் பலம் குறைவாகவே இருக்கும். அதோடு சனி ஆட்சி பலம் பெறுவதால் பெரிதாக கவலைப்பட வேண்டிய அவசியம் இருக்காது. வாக்கு, குடும்பம், தனம் ஆகியவற்றை இரண்டாம் இடம் குறிப்பதால் இவற்றில் சனி பகவான் தனது ஆதிக்கத்தினை செலுத்துவார். சொன்ன சொல்லைக் காப்பாற்ற மிகுந்த சிரமப்பட வேண்டியிருக்கும் என்பதால் யாருக்கும் எளிதாக எவ்விதமான வாக்குறுதியும் அளிக்காதீர்கள். நிஷ்டூர வார்த்தைகள் வாயிலிருந்து வெளிப்படக்கூடும். கோபத்துடன் யாரையாவது ஏதாவது திட்டினால் அது அப்படியே நடந்துவிடும் என்பதால் தீயசொற்களைத் தவிர்த்து முடிந்தவரை நற்சொற்களையே பயன்படுத்துவது நல்லது.


நிதி : கடந்த ஆறு வருடங்களாக ஏழரைச்சனியின் தாக்கத்தினால் கூடுதல் செலவுகளைச் சந்தித்து வந்த நீங்கள் இந்த சனிப்பெயர்ச்சி மூலம் வரவு நிலை அதிகரிக்கக் காண்பீர்கள். தன ஸ்தானத்தில் ஆட்சி பெற்றிருக்கும் சனி பொருள் வரவினைத் தந்தாலும் அதனை அவசரத் தேவைக்கு எடுத்து உபயோகிக்க உதவமாட்டார். கண்ணுக்குத் தெரியாத அளவில் சேமிப்பாக உயருமே அன்றி அன்றாட செலவுகளுக்கு சற்று சிரமம் காண வேண்டியிருக்கும். கடன்பிரச்னைகளை ஒரு வரையறைக்குள் கொண்டு வருவீர்கள். அடுத்தவர் வாங்கும் கடனுக்கு ஜாமீன் பொறுப்பேற்பது கூடாது.


குடும்பம் : குடும்ப உறுப்பினர்களுக்கிடையே ஒற்றுமையுணர்வினைத் தோற்றுவிப்பதில் முக்கியப் பங்காற்றுவீர்கள். உடன்பிறந்தோருடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சொத்துப் பிரச்னைகள், பாகப்பிரிவினை சம்பந்தப்பட்ட விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். சொத்து விவகாரங்களில் குடும்பப் பெரியவர்களுடன் கலந்து ஆலோசித்து பின்னர் முடிவெடுத்துச் செயல்படுவது நலம். தாயார் வழி உறவினர்களுக்கு உதவப்போய் தர்மசங்கடமான சூழலுக்கு ஆளாக நேரிடலாம்.


கல்வி : தேர்வு நேரத்தில் ஞாபக மறதித் தொந்தரவால் சற்று அவதிப்பட நேரிடலாம். கூடுதலான எழுத்துப் பயிற்சியும், நண்பர்களோடு இணைந்து மேற்கொள்ளும் கூட்டுப் பயிற்சியும் அதிக நன்மை தரும். காமர்ஸ், எக்கனாமிக்ஸ், ஆடிட்டிங், அக்கவுண்டன்சி, கணிதம், மொழிப்பிரிவு பாடங்கள் ஆகியத் துறைகளில் மாணவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். போட்டித்தேர்வுகள், நேர்முகத் தேர்வுகள் ஆகியவற்றை தைரியமுடன் எதிர்கொள்ள சிறிதளவு துளசி தீர்த்தத்தினைப் பருகிவிட்டுச் செல்லவும்.

பெண்கள் : அதிகம் பேசாமல் அளவோடு பேசி வருவது நல்லது. நாம் பேசும் பேச்சுக்கள் மற்றவர்களால் தவறாகப் பொருள் காணப்படுவதற்கும், அடுத்தவர் செய்யும் தவறுகளுக்கு வீண்பழி சுமக்க வேண்டியதற்குமான வாய்ப்புகள் உள்ளதால் அண்டை, அயலார் வீட்டுப் பெண்களுடன் ஒரு வரைமுறைக்குள் பழக வேண்டியது அவசியம். எந்த ஒரு விஷயத்தையும் கணவரின் ஆலோசனையின் பேரிலும், பெரியவர்களின் ஆலோசனையின் பேரிலும் செய்து வருவது நல்லது.


உடல்நிலை: அவ்வப்போது உடல்நிலையில் அசதியான சூழ்நிலை தோன்றும் வாய்ப்பு உண்டு. மற்றபடி உடல்நிலையில் பெருத்த சிரமம் ஏதும் இராது. இரும்புச்சத்து மிக்க காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை அன்றாட உணவினில் சேர்த்துக் கொள்வது நன்மை தரும். பெற்றோருக்கான மருத்துவ செலவுகள் உண்டாகும் வாய்ப்பு உண்டென்பதால் அவர்களது உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.


தொழில் : தொழில்முறையில் உங்களது முழுமுயற்சினால் மட்டுமே சாதிக்க முடியும் என்பதை நினைவில் கொள்ளவும். அயல்நாட்டு சம்பந்தமுடைய தொழில்கள், ஏற்றுமதி, இறக்குமதி, இரும்பு, கம்பி, பழைய சாமான்கள் வியாபாரம்,  சிமெண்ட் போன்ற தொழில்களில் உள்ளோர் முன்னேற்றம் காண்பார்கள். சமையல் கலைஞர்கள், மருத்துவத்துறை சார்ந்தவர்கள், கட்டிடக் கலைஞர்கள் ஆகியோர் தங்கள் தொழிலில் முக்கியமான இடத்தினைப் பிடிப்பார்கள். உத்யோகஸ்தர்கள் பதவி உயர்வின் பேரில் இடமாற்றத்தினை சந்திக்க நேரலாம். கீழ்நிலைப் பணியாளர்களிடம் பணம் சார்ந்த பொறுப்புகளை ஒப்படைக்கக் கூடாது.  அலுவலகத்தில் பணிச்சுமை கூடினாலும் அதற்குரிய தனலாபம் என்பது நிச்சயம் உண்டாகும்.


பரிகாரம் : அபிராமி அந்தாதி படித்து வருவது நன்மை தரும். தமிழ்மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை நாளில் கோபூஜை செய்து வழிபடவும்.

உத்திராடம் 1ம் பாதம் : ஏழரைச்சனியின் இறுதி பகுதிக்குள் வந்திருக்கும் நீங்கள் சோதனைகளை எல்லாம் சாதனைகளாக மாற்றிக்கொள்வீர்கள். ஏழரை சனியின் தாக்கம் ஒரு புறம் இருந்தாலும் ராசிநாதன் குருவின் இணைவு நற்பலனைத் தரும். 2021 நவம்பர் மாதம் வரை ஏழரை சனியின் தாக்கத்திலிருந்து சற்று விடுபடுவீர்கள். உங்களுடைய சேவை மனப்பான்மையும், தொண்டு உள்ளமும் அதிகமாக வெளிப்பட்டு நற்பெயரை அடைவீர்கள். சுயநலத்திற்காக அல்லாது அடுத்தவர்கள் நலனுக்காக அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். உங்கள் தைரியமும், மன உறுதியும் அதிகரித்து எதையும் தாங்கும் இதயத்தினை பெறுவீர்கள். முன்பின் தெரியாத நபர்களிடம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மாற்று மதத்தினர், மாற்று மொழி பேசுபவர்கள் ஆகியோரால் ஏமாற்றப்படும் வாய்ப்பு உள்ளதால் எச்சரிக்கையுடன் பழக வேண்டி இருக்கும்.


நிதி : சிரமமான சூழ்நிலையிலும் பொருள்வரவு தொடர்ந்து இருந்து வரும். வரவிற்கு முன்னர் செலவுகள் காத்திருந்தாலும் சிக்கனத்தையும் கடைபிடிப்பீர்கள். அரசாங்க வங்கிகள் மூலமாகக் கடன் பெறக் காத்திருப்போருக்கு காலம் கனிந்து வரும். குடும்பத்தினரின் மனமகிழ்ச்சிக்காக அதிகம் செலவழிப்பீர்கள். பொருளாதார நிலை நிதானமாக உயரும். 2021ம் வருடத்தின் இறுதியில் அதிக செலவினைக் காண்பீர்கள். கொடுக்கல், வாங்கல் விவகாரத்தில் எச்சரிக்கையையும், நிதானத்தையும் கடைபிடிக்க வேண்டியது அவசியம்.


குடும்பம் : உடன்பிறந்தோருடன் கருத்து வேறுபாடு தோன்றி மறையும். உறவினர்களின் வருகையால் அதிக பொருட்செலவிற்கு ஆளாவீர்கள். பிள்ளைகளின் எதிர்கால நன்மைக்காக அவர்களை விட்டு பிரிந்திருக்க நேரிடும். குடும்ப ஸ்தானத்தில் சனி ஆட்சி பலத்துடன் அமர்வதால் நீண்ட நாள் சலசலப்புகள் முடிவிற்கு வரும். நெருங்கிய உறவினர்களால் ஒரு சில சங்கடங்களை சந்திக்க நேர்ந்தாலும் அவர்களுடனான சந்திப்பில் மனமகிழ்ச்சி காண்பீர்கள்.


கல்வி : ஏழரை சனியின் தாக்கத்தினால் மாணவர்கள் ஞாபக மறதிக்கு ஆளாவார்கள். பொதுத்தேர்விற்கு முன்னதாக நிறைய மாதிரித் தேர்வுகளை எழுதிப் பார்க்கவும். தேர்வு நேரத்தில் உங்களது எழுத்து திறமை அதிகரிக்கும். ஆகவே பாடங்களை ஒருமுறைக்கு இருமுறை எழுதிப்பார்த்து பழகுவதால் தேர்வில் வேகமாக எழுதி நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். இயற்பியல், மெக்கானிக்கல், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ் துறை மாணவர்கள் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தினைக் காண்பார்கள்.


பெண்கள் : உங்கள் வீட்டு பிரச்னைகள் வெளியே செல்வதால் மதிப்பு, மரியாதை குறைந்துவிடும் என்பதை மனதில் கொண்டு செயல்படுங்கள். தாய்வழி உறவினர்கள், சகோதரிகளால் பிரச்னைகள் தோன்றலாம். அவர்களோடு அதிகம் பேசாமல் அமைதி காப்பதால் புகுந்த வீட்டில் பிரச்னைகள் தோன்றாமல் இருக்கும். கணவரின் மனநிலையில் சிறப்பு கவனம் தேவை.


உடல்நிலை: ஹைபர் டென்ஷன் போன்றவற்றால் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. அற்பமான விஷயங்களுக்குக்கூட அதிக முக்கியத்துவம் அளிப்பதால் டென்ஷன் கூடுகிறது. சர்க்கரை வியாதிக்காரர்கள், இரத்தக்கொதிப்பு நோய் உள்ளவர்கள், இரத்தத்தில் கூடுதல் கொழுப்பு உள்ளவர்கள் உடல்நிலையில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

தொழில் : அரசுத்துறையில் பணி புரிபவர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றத்திற்கான வாய்ப்பு உள்ளது. அலுவலகத்தில் வேலை பளு அதிகரிக்கும். கீழ்நிலைப் பணியாளர்களின் ஆதரவினைப் பெறும் நீங்கள் மேலதிகாரிகளிடம் நற்பெயர் காண சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். விருப்ப ஓய்வு பெற நினைப்பவர்கள் தங்கள் முடிவினை மறுபரிசீலனை செய்வது நல்லது. சுயதொழில் செய்வோர் பணியாட்களுக்காகக் காத்திராமல் தாங்களே எல்லா வேலையையும் செய்ய வேண்டியிருக்கும். விவசாயிகள், ஹோட்டல் துறையில் பணி புரிபவர்கள், நகைக்கடை அதிபர்கள் நல்ல தனலாபத்தினை அடைவார்கள். ஜூலை மாதத்திற்குப் பிறகு வியாபாரிகள் புதிய முயற்சியில் ஈடுபட வாய்ப்புகள் உருவாகும்.


பரிகாரம் : ஆதிபராசக்தி அன்னையை வழிபட்டு வாருங்கள். அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடுவதும் நன்மை தரும்.



Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags